முன் கதை இ வன் எல்சா ஹாப்மேனின் கரங்களைப் பற்றியபடி பேருந்தை விட்டு இறங்கிய அந்தப் பகலின் கடைசி நிமிடங்களில், நூறாண்டுகளுக்குப் பிறகான மேக வெடிப்பொன்று தாக்குவதான தோரணையில், கருமேகங்கள் பலமாக மழைத்துளிகளாய் சிதறிக்கொண்டிருந்தன. மாலைநேர மழையின் வேகத்தில் அடங்கிக் கிடந்த அந்த சிறிய கிராமத்தில், மழையின் ஓசையைத் தவிர்த்து வேறேதும் கேட்கவில்லை. பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த கிழவர்கள் அனைவரும் ஒருசேர இமைக்காமல் பார்ப்பதை இவனால் உணர முடிந்தது, எல்சாவும் அப்படி உணர்ந்திருக்க வேண்டும்தான், தாங்கள் தங்கவிருக்கும் தொண்டு நிறுவனத்தின் கட்டிடம் ஊரின் வடக்கு எல்லையில் இருப்பதாய் இவன் காதுகளில் முணுமுணுத்தாள்... அவர்கள் வேறெதுவும் பேசிக்கொள்ளாமல், செம்மண் கலந்த மழை வெள்ளம் திரண்டோடிய வீதியில் வடக்குமுனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு பழுப்பு நிற ஆணுடன், முட்டியளவு மழை வெள்ளத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அரைக்கால் டிரவுசரும், டீ-சர்ட்டும் தரித்தவளாய் நடந்து வந்த வெள்ளைத் தோல் பெண் அந்த சிறிய க...