0. சமகால மனித சமூகங்கள், தண்டனை சட்டங்களால் வழி நடத்தப்படுகின்றன. ஒரு சமூகத்தின் அறத்தையும், நீதியையும் முடிவு செய்யும் வலிமை கொண்டவையாக இருக்கும் தண்டனை சட்டங்கள் அறத்தையும் , நீதியையும் நிலைநிறுத்த வேண்டி, வன்முறை மற்றும் பயத்தினை மூலதனமாகக் கொண்டு இயங்குகின்றன. தண்டனை சட்டங்களால் இயக்கப்படும் நம் சமூகங்களில் வாழும் மனிதர்களின் இருப்பு என்பதே இந்த சட்டங்கள் இயல்பாக உருவாக்கும் அச்சம் மற்றும் வன்முறை உண்டாக்கும் பயத்துடனான வாழும் இருப்பாகியிருக்கிறது. சமூக மயமாக்கப்படுத்தலின் ஊடக, இந்த வன்முறை மற்றும் பயத்தை இயற்கையான சமூக செயல்பாடாக நம்பவைக்கப்படுகிறோம். சமூகத்தில் நீதி மற்றும் அறத்தை உறுதி செய்வதாகச் சொல்லும், அரசியல் சட்ட நூல்களில் எண் வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் தண்டனை சட்டங்களுக்கும் நீதிக்கும் அறத்துக்கும் எப்போதும் பாரிய இடைவெளிகளே இருக்கின்றன. இச்சட்டங்கள் இயங்குவதற்கு ஆதாரமாகவிருக்கும் நீதித்துறை எனும் அதிகார அமைப்பு, ஃபூக்கோ சொல்வதைப் போன்று, “தீவுக்கூட்டத்தை” போல் சிக்கலான உபஅமைப்புகளை கொண்ட ஒரு நிறுவனமாகச் செயல்படுகிறது - நீதிமன்றம், சிறை, காவல், கண்காணிப்பு, ராண...