அ ன்புள்ள ராம் என்கின்ற கே. ராமசந்திரனுக்கு, வணக்கம்! இக்கடிதத்தின் வழியாக உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். 22 வருடங்கள் கழித்து ஜானுவை சந்தித்த பேரானந்தத்தில் இருக்கும் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுவதற்கான காரணம் உங்கள் மீதான பொறாமை மட்டுமே என்பதனை முதல் குறிப்பாகவும், உங்கள் காதல் குறித்து சில பல கேள்விகள் இருந்தாலும் அவற்றை இக்கடிதத்தின் இரண்டாம் பகுதியில் கேட்க முடிவு செய்திருப்பதாலும், உங்கள் மீதான் பொறாமைக்கும் உங்கள் காதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இரண்டாம் குறிப்பாகவும் சொல்லிக்கொண்டு இந்த கடிததை தொடர்கின்றேன். 1 உங்களுக்கு ஆனந்தமான ஒரு பள்ளி காலம் கிடைத்திருக்கின்றது, கல்வி நிலையங்கள் குறித்து மகிழ்ச்சியான எந்த நினைவுகளும் இல்லாத அல்லது அப்படியான எந்த சூழலும் வாய்க்காத ஒருவனுக்கு உங்களுக்கு கிட்டிய பள்ளி காலம் குறித்து பொறாமையே மிஞ்சும். ஃபூக்கோவை வாசிப்பதற்கு முன்பே கல்வி கூடங்களை சிறைசாலைகள் என்றே நான் புரிந்து வைத்திருந்தேன். அந்த சிறை கூடங்களில் தான் என் வாழ்வின் 15 ஆண்டுகளை கழித்திருக்கின்றேன். அதிகாரமும், அடக்குமுறைகளும் மட்டுமே நிறம்பிய அந்த இடங்க...