அ ந்நியனை வாசித்துவிட்டு என்னை மெர்சோவாக உருவகப்படுத்திக்கொண்டு வெயில் தகிக்கும் கோடையின் பகற் பொழுதுகளில் கை விரல்களை துப்பாக்கியாகக் கருதிக் கொண்டு கடற்கரை மணலில் பெயரற்ற அந்த அரேபியனை தேடி அலைந்த பொழுதுகளை நினைத்து பார்க்கிறேன். இருத்தலியத்துக்கும் அபத்தத்துக்கும் கிளர்ச்சிக்கும் இடையேயான இடைவிடாத உரையாடலாக காம்யுவின் வார்த்தைகளில் சிக்குண்டு, வாழ்வின் அபத்தங்களை இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கின்றேன். அந்நியனை தொடர்ந்து வீழ்ச்சி, முதல் மனிதன், கிளர்ச்சியாளன் என்று நீண்ட காம்யு மீதான தேடல் வாழ்வின் அபத்தம் குறித்த தேடலாகத் தொடர்கின்றது. காம்யுவை விட்டு விலகி ஓடுவதென்பது எத்தனை முயற்சித்தும் இயலாத ஒன்றாகவே இருக்கின்றது. காரணம் காம்யு எனும் வார்த்தை ஒரு தனிமனிதனையோ அல்லது எழுத்தாளனையோ குறிக்கும் பெயர்சொல் மட்டும் அல்ல, அது அபத்தவாதத்தின், கிளர்ச்சியின், வாழ்க்கை பற்றிய தேடலின் குறியீடு. வாழ்வின் அல்லது வாழ்க்கை என்று சொல்லப்படுவதின் அபத்தங்களை அதன் படிநிலைகளை இடைவிடாது உடைத்து விசாரிக்கும் காம்யுவின் பிரதிகள் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே நிகழும் பயணமான ’இருப்பு’ குறித்த...