ஒ ரு விரல் புரட்சி குறித்து பேசும் போது, இரண்டாயிரம் வருடங்களாக வழக்கில் இருக்கும் ஒரு சொல் குறித்து பேசுவதும் தேவையானதாக இருக்கிறது. அதாவது பூமி தட்டையானது, அண்டத்தின் மையமாக பூமி இருக்கிறது, சூரியன் உட்பட மற்ற அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பூமியை சுற்றி வலம் வருகின்றன என்று உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்த காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தை, இன்றளவும் அதன் வீரியத்தை இழக்காமல் மக்களுக்கான அதிகாரத்தை மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் அனைத்து வலிமையையும் கொண்ட மாபெரும் அரசியல் வடிவம் என்று கொண்டாடப்படுகிறது. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்று சொல்லப்படும் அந்த வார்த்தையின் அபத்தம் என்னவெனில் அறிவியல், பூமி மைய வாதத்தை கடந்து, சூரிய மைய வாதம், குவாண்டம், கருந்துளை, பன்மை அண்டங்கள் எனும் கருத்தியல்கள் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றளவும் மக்களாட்சி முறையே அரசியல் அமைப்பின் உச்சம் அல்லது அதை தாண்டிய சிறந்த அரசியல் முறையை மனிதர்கள் இன்னும் கண்டடையவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இன்றுவரை அரசியலின் மேன்மைகள் மக்களாட்சி கொள்கைகளை அளவீடுகளாக கொண்டே அண...