நாள்: 18/04/1993 மழை விடாமல் அடித்துக்கொண்டிருந்தது, மணி அதிகாலை நான்கு இருக்கும். எங்கும் கும்மிருட்டு பெருமழையாதலால் சுற்றிலும் ஆள் அரவமில்லை, இல்லையெனில் பால் கறக்கவாவது ஒருவர் இருவர் போவதும் வருவதுமாக இருப்பர். கொம்புக்காரன் எங்களை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அருகிலிருந்த பழைய கொட்டாயில் ஒதுங்கி நின்றுக் கொண்டிருந்தான். விடியும் முன் புதன் சந்தையை அடைந்துவிட வேண்டும், மழையின் வேகத்தை பார்த்தால் விடிந்தாலும் விடாது போல்தான் இருக்கிறது. மழை சிறிது ஓய்ந்தால் கூட போதும் அவன் தலையில் எதையாவது போர்த்திக்கொண்டு எங்களை விரட்ட ஆரம்பித்துவிடுவான் . அவன் பாவம் என்னை செய்வான் ஒழுங்காய் சரியான நேரத்துக்கு எங்களை கொண்டுப்போய் சேர்த்தாலே கூலி கொடுக்க வியாபாரி மூக்கால் அழுவான், இதில் தாமதமாய் போனால் ? மேலும் சீக்கிரம் போனால் தானே நல்ல விலைக்கு எங்களை விற்க முடியும். மழை இன்னும் விட்ட பாடில்லை அடிவானம் வெளுக்க தொடங்கியிருந்தது. கொம்புக்காரன் எங்கிருந்தோ கிடைத்த சவ்வு காகிதத்தை தலையில் மாட்டியபடி எங்களை மரத்திலிருந்து அவிழ்த்து நடக்க ஆரம்பித்தான். நேற்று இரவு முதல் இவ...