//என் வாழ்வில் நான் பார்த்த மிக உன்னதமான மக்கள் போராட்டமான கூடங்குளம் போராட்ட குழந்தைகளுக்கு சமர்ப்பணம்//
அன்புள்ள ரோசி,
நீ எப்படி இருக்கிறாய். நிச்சயம் நீ நலமாக இல்லை என்று எனக்கு தெரியும். என்னை போலான ஒரு சாவினை விரும்பாமல் நீ போராடுகிறாய். அதற்கு பதிலாய் உன்னை அடிக்கிறார்கள், பட்டினி போடுகிறார்கள், துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார்கள் உன்னை தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறார்கள், உன் மீது தேச துரோக வழக்கு போடுகிறார்கள். இருந்தும் நீ அஞ்சாமல் போராடுகிறாய் உன்னை வெல்ல முடியாமல் திணறுகிறது உன் அரசு. நான் மரணிக்கும் போது உன் வயது தான் எனக்கு, இப்போது உயிரோடு இருந்திருந்தால் உன் பாட்டி வயதிருக்கும்.
அது ஒரு கடும் போர்க்காலம் பெரும் சப்தங்களும், புகைகளும், கண்ணீரும், மரணங்களும் நிறைந்து ஆட்சியாளர்களின் ஆணவத்தால் எங்கள் வாழ்க்கை தோற்றுக்கொண்டிருந்த காலம் அது. போர் நிரம்பிய ஒரு நாளில் தாயின் கருவறையை விட்டு வெளியே வந்தேன், வராமலே இருந்திருக்கலாம். என் அம்மாவின் கருவறையே அதிரும் இரைச்சல்களில் வாழ பழகிக்கொண்டேன். ஒரு நாள் நாங்கள் யாரும் எதிர்பாரா நேரத்தில் ஒரு பெரிய இரும்பு பறவை எங்களை நோக்கி ஒரு மிகப்பெரிய இரும்பு விதையை தூவியது, சில நொடிகளில் எல்லாமே அஸ்தமித்து விட்டது. இரண்டு வயது குழந்தையான எனக்கு அப்போது என்ன நடந்து என்றே தெரியவில்லை எப்படியோ உயிர் பிழைத்து கட்டிட இடுகுகளின் நடுவில் கிடந்தேன். அம்மா என்னை தேடி கண்டுபிடித்தாள், நான் உயிருடன் கிடைத்ததுக்காய் மிகவும் ஆனந்தபட்டாள் ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை அது மரணத்தின் ஆரம்ப நாள் என்று. பத்து வருடங்கள் கழித்து என் கழுத்தில் முதலில் ஒரு கட்டி வந்தது, பிறகு அந்த கட்டி உடலெங்கும் பரவியது. அம்மா என்னை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றாள் மருத்துவர்களோ யார்க்கும் புரியாத வார்த்தையை அந்த நோயின் பெயராய் சொன்னார்கள். அம்மா அதை அணு நோய் என்றாள். எங்கள் மீது போட்ட அந்த ராட்சச விதையின் காரணாமாய் எங்கள் ஊரில் பலருக்கு அந்த நோய் வந்திருந்தது. என்ன வைத்தியம் செய்தாலும் பிழைக்க முடியாத நோய். நான் மருத்துவமனையில் நிரந்தரமாய் அனுமதிக்கப்பட்டேன், எப்போதும் தாங்க முடியாத வலி உடல் முழுதும் இருக்கும், கண்ணீர் என்னை அறியாமல் எச்சிலை போல் வழிந்துக்கொண்டே இருக்கும். சில சமயம் வலியின் காரனமாய் உடல் மருத்து போகும்.வலியும், ஊசிகளும், ஓலமும் வாழ்க்கையாகிப்போனது. நான் சொல்வதை கேட்டு பயந்துவிடாதே ரோசி. நான் சொல்வதை கேட்டு நீ பயப்படவேண்டுமென்று இதை நான் சொல்லவில்லை, என் வாழ்வில், என்னை போன்ற பல ஆயிரம் பேர் வாழ்வில் நடந்த உண்மையை சொல்லிக்கொண்டிருகிறேன். உனக்கு இந்த உண்மைகள் தெரிந்ததால் தான் துப்பாக்கிகளுக்கும், லாத்திகளுகும் அஞ்சாமல் போராடுகிறாய். ஒரு இனக்குழுவின் தலைமுறைகளை காப்பதற்காக, உன்னை அடிபவர்களின் பிள்ளைகளயும், வாரிசுகளையும், தலைமுறைகளையும் காப்பாற்ற தான் நீ போராடுகிறாய். நீ உன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் அவர்களை போன்ற நயவஞ்சகர்கள் அல்லவே. சரி மிச்சமிருக்கும் என் மீதி கதையை சொல்லிவிடுகிறேன்.
நான் முன்பே சொன்னதை போல் சொல்ல முடியா துன்பங்களுக்கு ஆளானேன், என் ரத்தம் நெருப்பினை போல் என் உடலில் வளம் வந்தது, முடிகள் உதிர்ந்துப்போய் அகோரமாய் காட்சியளித்தேன். ஆங்காங்கே கொப்புளங்கள் அதில் சீல் வழிந்தது, இன்னும் விட்டிருந்தால் புழுக்கள் குடிக்கொண்டிருக்கும். என்னை சுற்றி பலர் எனக்கு வந்த நோயால் பதிக்கப்பட்டு அனுமதிகப்பட்டிருந்தார்கள். என் அருகில் இருந்த சிறுவன் வானுக்கு தலை ஒரு பனம்பழத்தை போன்று வீங்கி கொடூரமாய் காட்சி தந்தது, அவன் தலையில் பெயருக்கு கூட ஒரு முடியில்லை, அவன் மனிதனின் சாயலில் இருக்கவில்லை. நான் என்னை கண்ணாடியில் பார்த்து மாதங்கள் பல ஆனதால் நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் மனிதனின் சாயலில் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. எங்கள் ஊர் கதைகளில் வரும் வெறிபிடித்த டிராகன்களின் முகத்தை போல்தான் என் முகமிருக்கும். சில காலம் முன்பு வரை என் பாட்டி என்னை மஞ்சள் தேவதை என்று தான் அழைப்பாள், என் அழகின் மீது அத்துணை பாசம் அவளுக்கு. மஞ்சள் தேவதை சாத்தனின் முகத்துடன் மரணத்தை நோக்கி படுத்திரு ந்தேன் . எனக்கு இன்னும் நன்றாக நியாபகம் இருக்கிறது, மருத்துவர்கள் என் நோய்க்கு காரணம் "அணு கதிர்வீச்சு" என்றார்கள், அது பல தலைமுறைகளுக்கு தொடரும் என்றார்கள். இன்னும் பல பத்தாண்டுகளுக்கு உடல் சிறுத்து, தலை வீங்கி, புண்களுடன், குறைகளுடனுமே குழந்தைகள் பிறகும் என்றார்கள் அப்படி தான் இன்று வரை நடக்கிறது. என் இறுதி காலத்தில் ஒரு நான் என் தோழி சிசுகோ என்னை பார்க்க வந்தாள். அவள் கைகளால் செய்த காகித கொக்கினை தந்து இது போல் ஆயிரம் காகித கொக்குகளை நீ செய்தால் கடவுள் உன்னை மரணத்திலிருந்து மீட்பார் என்றாள்.நானும் கொக்குகள் செய்ய ஆரபித்தேன் என் விதி 664வது கொக்கினை செய்யும்போதே என் நோய் என்னை முழுமையாய் ஆட்கொண்டுவிட்டது. நான் மரணித்து விட்டேன் கடவுளும் என்னை ரட்சிக்காமலே விட்டுவிட்டார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு நினைவு நாளிலும் எனக்காய் ஆயிரம் கொக்குகளை செய்து பரக்கவிடுகின்றனர். நான் அணு கதிர்வீச்சு எதிரான முகமாய் மாறி நிற்கிறேன். எப்போதும் என்னை போன்ற அப்பாவிகளுக்கும், அபலைகளும், சிறுவர்களுக்கும் ஆதரவாய் அருள் செய்கிறேன். இருந்தும் அதிகார மையங்கள் ஆசையடங்காமல் அணுக்களை கொண்டு பல லட்சம் உயிர்களை கொன்ற படி இருகின்றனர். செர்போனில், பிகுஷிமா, கல்பாக்கம் என்று நீண்டுக்கொண்டே இருக்கிறது. இப்போது உன் ஊருக்கு வந்துள்ளனர்.
நீ அறிவாயா என்று தெரியாது ஆனால் நான் நன்கு அறிவேன், அணு எதிர்பாளர்களின் மனசாட்சி நான். உங்கள் போராட்டம் இருபது வருடங்களாய் தொடர்கிறது. இந்த கொலைகார திட்டம் ஆரம்பித்த 1988 ஆம் ஆண்டு முதல் உங்கள் அப்பனும், ஆத்தாளும் போராடுகிறார்கள். இதையெல்லாம் வேண்டுமென்றே மறைகிறார்கள் உங்கள் ஆட்சியாளர்கள். அணு குறித்து அறிவியல் அறிவு இல்லாத ஏவுகணை அறிவியலில் தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட ஒருவரை அறிவயல் மேதை என்று சொல்லி அவர் சொல்வதை வேத வாக்காய் ஏற்றுக்கொள்ள செய்கின்றனர். அணுவுக்கான அடிப்படையை கண்டுபிடித்த முட்டாள் அறிஞன் ஐயன்ஸ்டினோ தான் மனித இனத்துக்கு பெறும் குற்றமிழைத்துவிட்டதாய் வருத்தப்பட்டார், தன் அறிவியல் திறமையே வெறுத்தார். அப்போது யார் சொல்வது உண்மை. கண்டுபிடித்தவனா, அந்த அறிவியல் குறித்து சிறிதும் விஷயம் தெரியாதவரா ?. உங்கள் டிவிகளும், செய்திதாள்களும் எப்போதும் போல் அரசின் கால்களை நான்றகவே நக்க செய்கிறார்கள். போலிஸ் மெலிதான தாக்குதல் நடத்துவதாய் சொல்கிறார்கள் அது எப்படி கையில் உருட்டு தடிகளையும், துப்பாக்கியும் தாங்கிய ஒருவன் மெலிதான் தாக்குதல் நடத்தினான் என்பதை நம்புவது, அதுவும் நிராயுதபாணிகளாய் நின்ற உன்மீதும், உன் நண்பர்கள் மீதும், உன் அம்மாக்கள் மீதும், பாட்டிகள் மீதும், தாத்தாக்கள் மீதும் மெலிதான தாக்குதல் நடத்தினார்களாம்.
உனக்கு இன்னொரு கதை சொல்லுகிறேன் ரோசி. பெரிதாய் வீங்கி, கொப்புளங்கள் நிரம்பி, சீல் வலியும் கால்களை உடைய ஒரு உக்ரேனிய சிறுவனின் கதை இது.செர்னோபில் நகரத்தில் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த அணு வெடிப்பின் பரிசு அவன் கால்கள். என்னைப்போலவே புற்றுநோயுடன் வாழ்ந்துவருகிறான். பாவம் அவனும் என்னைப்போலவே என்ன நடக்கிறது என்பதை அறியும் முன்னரே அவன் வாழ்க்கை அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டது. அவனும்,நானும்,நீயும் எதைக்கொண்டு சபிகப்படவர்கள் ரோசி. நாம் மனிதர்களாய் பிறந்தே பெரும் பாவமா ?அதை தாண்டி வேறு என்ன செய்தோம் நாம் ? நான் மரணித்துவிட்டேன், அவன் மரணத்துடன் போராடுகிறான், நீ எங்களை போன்று ஒரு அவலத்தை சந்திக்க வேண்டாமென்று போராடுகிறாய். நீ போராட வேண்டிய வயதிலா இருகிறாய் ? கடற்கரையில் துள்ளி திரிய வேண்டிய நீயும், உன் தோழர்களும் கடலில் நாள் கணக்கில் நின்றப்படி வாழ்கைக்காய் போராடுகின்றிர்கள். நீங்களும், உங்கள் போராட்டமும் போலிகள் அல்ல நீங்கள் நிசமானவர்கள். வாழ்க்கைக்கும், மனிதத்துக்கும் போராடும் மழலைகள் எப்படி போலிகளாய் இருக்க முடியும்.
உங்கள் ஊரில் ஏற்கனவே இருக்கும் கல்பாக்கத்தை பற்றி சொல்லாமல் மறைக்கப்பட உண்மைகளை நான் சொல்லியே ஆக வேண்டும் என் அருமை தோழி. கல்பாக்கம் உலை தொடங்கிய 1983 ஆண்டு முதல் அங்கு சுற்றி இயற்கை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது, கடலின் வெப்பம் எட்டு டிகிரி அதிகரித்துள்ளது, இதுனால் மீன்வளமும்,கடல் சார் உயிரினமும் அழிந்துவருகிறது. 2004 சுனாமியில் கல்பாக்கத்தில் நடந்த எல்லா பாதிப்புகளையும் மறைத்துவிட்டனர் ஆட்சியாளர்கள். கல்பாக்கத்தை சுற்றி புற்றுநோய், மனப்பிரழ்வு, குழந்தையின்மை, இன்னும் பல புதிய புதிய நோய்களால் மக்கள் அதிக அளவு பாதிகப்படுகினறனர் என்பதை பல ஆய்வுகள் நிருபிகின்றன. அப்படி இல்லை எனில் எதற்காய் காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டினார்கள் ? இப்படியான நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்ல ஜெயலலிதா அம்மாவுக்கோ, நாராயணசாமி ஐயாவுக்கோ, 'தோழர்' (?) நல்லகண்ணுவுக்கோ நேரமில்லை. ஆனால் அணுஉலை பாதுகாப்பு என்பார்கள். இறுதியில் எல்லாவற்றையும் மின்சார பற்றாக்குறையில் கொண்டுபோய் சேர்த்து மக்களின் உணர்வுகளை திசைதிருப்ப பார்கிறார்கள். இந்தியா முழுதுமே மின்சாரம் இல்லாமல் இருண்டுகிடகிறது ஒரு கூடங்குளம் எப்படி மொத்த பசிக்கும் உணவாக முடியும் ? அணு அத்துணை பாதுகாப்பானது எனில் டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் அருகில் ஒரு அணுஉலையை நிறுவலாமே? இல்லை சோனியாவும், மன்மோகனும் அணு உலைக்கும், அதன் மூலபொருளான யுரேனியத்துகும் ஆயுத பூசை போடுலாமே.
என் அன்பு ரோசி, நீ போராடு, இறுதி வரை போராடு இந்த உலகில் நியாயம் எங்காவது ஒரு இடுக்கில் நிச்சயம் இருக்கும் அது உன்னையும் என்னையும் நம் மக்களையும் வெற்றிபெற செய்யும். பாவப்பட்ட அணுவுக்கு பலியான பல கோடி பேரும் உங்களும் உன் மக்களுக்கும் ஆதரவாய் நிற்கிறோம். என் ஆயிரம் கொக்குகளும் உன்னுடன் சேர்ந்து போராடும். நீங்கள் அற்புதமான போராட்டகாரர்கள் உலகமே உங்களிடம் கற்கவேண்டிய பாடம் நிறைய இருக்கிறது. நீங்கள் எல்லோரும் தொண்டர்களே, நீங்கள் எல்லோரும் தலைவர்களே. உங்களை ஒன்று திரட்டி வழிநடத்த அறிவார்ந்து சிந்தித்து செயல்படும் மனிதன் இருக்கிறான். நீ போராடிக்கொண்டே இரு நீயும் நானும் ஒன்று சேர்ந்து வெற்றிபெறுவோம். உன் போராட்டத்தை அடக்க முற்படும் அதிகரமையத்தின் வாரிசுகளையும் சேர்த்து காப்பாற்றுவோம். இது உனக்கான என் அன்பின் முத்தங்களும், ஆசை கொக்குகளும்.
இப்படிக்கு,
உன் அன்பு தோழி,
சாடோகா சசாகி.
(ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பில் தப்பித்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு ரத்த புற்றுநோயால் மரணித்தவள்)
புதிய தரிசனம்
Comments
Post a Comment