என் மரணவிழாவில் இசைக்கப்படும் கவிதை இப்படியனதாய் இருக்கலாம்...
இதோ இங்கு சயனித்து கிடக்கும் இச்சவம்,வரண்டுப்போன ஓர் மாலைநேரத்தில்
யாருக்கும் அறிவிக்காமல் தன் உயிரினை வெளியேற்றியது...
தடைகளின்றி பொழுதுகடந்து உறங்கிக்கொண்டிருக்கிறது...தன் அடிமை
வாழ்வுக்கு ஓய்வுத்தந்து சுதந்திரமாய் கிடக்கிறது.
இச்சவம் அடிமையாகவே ஜனித்தது, அடிமையாகவே வாழ்ந்தது
அடிமையாகவே மரணித்தது சுதந்திரமடைந்தது...
இதுகாலம் தன்குறியை உயர்த்திப்பிடித்து தகுதியேயின்றி பெண்ணியம் பேசி அலைந்துக்கொண்டிருந்தது...
மார்க்ஸை, லெனினை புத்தகங்களில் தாங்கியவாறு ஏட்டுசுரைக்காய்
புரட்சி பேசித்திரிந்தது...
கவிதைகளை எழுத முயற்சித்து இறுதிவரை தோற்றுக்கொண்டேயிருந்தது..
கதைகளில் தோல்விக்கண்டதும் இச்சவம்தான்.
தனக்கான இருப்பை பதிவுசெய்ய "இசங்களை" பேசித்திரிந்தது
பின்நவீன அரிச்சுவடியறியாமல் பின்நவீனம் பேசியது
ஆரம்பநிலையிலேயே முடிவுபெற்ற இச்சவத்தின் பிரதிகள் இறுதிவரை
முடிவின்றியே முற்றுப்பெற்றன.
ஊற்றவே முடியாத மதுவையும் நாவால் நக்கி பருகியது இச்சவம்
பித்தோவன் இசைக்காத இசையை இசைத்தாய் எண்ணிக்கொண்டது,
நெருடாவை தாண்டிய காதல் கவிதை படைத்ததாய் பெருமைபேசியது....
முகில்சூழ்ந்த ஒருமலை தேசத்தின் அழகியை காதலித்து..
காதலும்,காமமும் ஒருசேர வழிந்தோடியது...
அவளின் சுருண்டமயிர்க்கற்றைகளில் கவிதை பாடியது..
.அவளின் அரவணைப்பில் குழந்தையாய் மாறிப்போனது..
அவளுக்காய் தன் கவிதைகளை இசைத்துக்கொண்டேயிருந்தது...அவளும் தாலாட்டுப்பாடிக்கொண்டேயிருந்தாள்...
இச்சவத்தின் துரோகங்கள் சொல்லில்அடங்காது...
கோடிக்கணக்கான மானிட உயிர்களின் மரணத்தில் சோறுத்தின்றது, காமம்புரிந்தது...
மனிதகுருதியின் சுவையில் போதைக்கொண்டது, மனிதசதைகளை புசித்தது...
ஒருநாள் மதுவெறியில் தஸ்தாயெவ்ஸ்கியின் சதையை புசித்துக்கொண்டிருப்பதை கண்டேன்
அவர் மரணவலியில் கதறிக்கொண்டிருந்தார்
மேலுமொருநாள் பொலிவியாவில் "சே"வினை புசித்தது....
ஒருபொழுது பாரதியை கால்களால் நசுகிக்கொண்டிருந்தது
புத்தன் வேடம்தரித்து ஒரேநாளில் பல்லாயிரம் உயிர்களை தின்றது...
உருமாறி அரை பொழுது உன்னாநோம்பு இருந்ததும் இச்சவமே....
இப்படி எல்லோரையும் புசித்தது....
எல்லாம் முடிந்து விடைப்பெறவிருக்கிறது இச்சவம்......
Comments
Post a Comment