குறிப்பு: நிச்சயம் இது நூல் விமர்சனமில்லை, எந்த ஒரு படைப்பையும் விமர்சிக்கும் அளவு பெரிய இலக்கிய ஆளுமை நானில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தை அடுத்தவரும் படிக்கவேண்டும் எனும் நோக்கில் அறிமுகம் செய்கிறேன் அதுமட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம். இது ஒரு உதவாக்கரை கட்டுரையாக, இலக்கிய ஆளுமையும், விமர்சனதன்மையும் இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம் ஆனால் நான் வாழும் சமுகத்தில் நடக்கும் மனித அவலம் குறித்து பேசிய பல பிரதிகளில் ஒரு பிரதியை இக்கட்டுரை பேசுகிறது என்பதை மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும். நன்றி.
“சௌந்தர் படித்து பட்டம் வாங்கி வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்தில் பணியாற்றுகிறார். சௌந்தரின் அப்பாவான கேசவன் பச்சைதுண்டு கவுண்டனின் நிலத்தில் பண்ணையாளாய் பத்து வருடங்கள் சேவகம் புரிந்தார். சௌந்தரும் பச்சைதுண்டு கவுண்டனின் மகனான பாஸ்கர்கவுண்டனும் சம வயதினர், ஒரே பள்ளியில் தான் படித்தனர். பாஸ்கர் பனிரெண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை அப்பனின் விவசாயத்தையும், வட்டி தொழிலையும் பார்த்துக்கொள்கிறான். சௌந்தர் கடன் வாங்க, வட்டி கட்ட என்று அடிக்கடி பாஸ்கர் வீட்டுக்கு வருவான். இதுவரை ஒரு நாள் கூட பாஸ்கர் வீட்டுக்குள் அழைகப்பட்டதில்லை, சௌந்தர் தரும் பணம் மட்டுமே பாஸ்கர் வீட்டின் பண பெட்டி வரை செல்லும், சௌந்தாருக்கு வீட்டு வாசல் வரை மட்டுமே அனுமதி. எப்போதாவது சௌந்தர் குடிக்க காபி தரும் பாஸ்கரின் மனைவி அவனுக்கென்று தனி தம்லாரை வீட்டு கூரையின் ஓரத்தில் தொங்கவிட்டிருப்பாள். அதை அவனே எடுத்து காபி குடித்துவிட்டு பிறகு கழுவி வைக்கவேண்டும். இத்துணைக்கும் இன்றைய சமுகம் மிகப்பெரிய செல்வமாய் சொல்லிக்கொள்ளும் கல்வியை முழுமையாய் பெற்றிருக்கிறான், பௌதிகத்தில் முதுகலை பட்டம். அரசு பணி, ஆதிக்க சாதி மக்களும் தங்கள் ஓட்டுனர் உரிமத்துக்கு சௌந்தரை சார்ந்திருக்கும் சூழலிலும் அவனால் ஒரு கவுண்டனின் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை, அவர்கள் வீட்டு தம்லாரில் காப்பி குடிக்க முடியவில்லை காரணம் சௌந்தர் ஒரு தலித்.”
மேலே சொன்ன கதைகள் நாள் தோறும் இந்த சமுகத்தில் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஒரு தலித் அதிகாரியாக வாழ்வதென்பது பன்மடங்கு அதிகமான ‘ஒரு தீண்டத்தகாதவனாக’ வாழ நேர்வதாகப்படுகிறது என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆம் இந்த சமுக அமைப்பு அரசியல் ரீதியாய் தலித் மக்களுக்கு கிட்டிய ஒரு சில வாய்ப்புகளையும் ஏற்க மறுக்கிறது. படிப்பு, அரசு வேலை, பொருளாதார முன்னேற்றம் என்று எத்துனை அடைந்தாலும் சமுகத்தில் ஒரு தலித் தலித்தாகவே இருக்கும் அவலம் நாடு விடுதலை அடைந்து அறுபத்திஆறு ஆண்டுகள் கடந்த பின்பும் நடந்தேறிக்கொண்டு தான் இருக்கிறது. தலித் ஊராட்சி தலைவர் ஆதிக்க சாதியினரால் தரையில் உட்காரவைக்கப்படுகிறார், தலித் ஊராட்சி தொகுதிகளில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தமுடியாமல் மேல் சாதியால் இடையுறு செய்யப்படுகிறது, தீண்டாமை சுவர்கள் வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் முதன்மையாய் நிற்கும் தமிழகத்தில் இருக்கவே செய்கிறது. கல்வியில் ஓங்கி வளர்ந்து நிற்கும் ஈரோடை மாவட்டத்தில் நாகப்பாளையம் எனும் கிராமத்தில் தீண்டாமை சுவர் புதிதாய் கட்டப்பட்டுள்ளது. பொதுவாகவே நேர்மையான அரசு பணியாளர்கள் ஓரம் கட்டப்படுவர் அதிலும் தலித் அதிகாரிகளின் நிலைமையோ சொல்லவே வேண்டாம். ஆசிரியர், அதிகாரி, குமாஸ்தா, மருத்துவர், பொறியாளர் என்று எத்துனை தூரம் வளர்ந்தாலும் இந்த சமுகம் ஒரு தலித்தை எப்போதும் மனிதனாய் பார்த்ததே இல்லை என்பது தான் வரலாறு சொல்லும் உண்மை. இந்திய அரசியல் அமைப்பை எழுதிய ஒரு மாபெரும் தலைவர் தான் இந்தியாவில் அதிகம் அவமானப்படுதலுக்கு உள்ளான தலைவராய் இருந்திருப்பார் காரணம் அவர் தலித். அம்பேத்கர் வாழ்ந்தகாலத்தில் அடைந்த அவமானங்களை விட மறைந்தபின் அவமதிகப்பட்டதே அதிகமாய் இருக்கும். இந்தியாவில் அதிகமான முறை செருப்பு மாளைகளை தாங்கிய அவலம் அண்ணலின் சிலைகளுக்கு மட்டுமே நடந்தேறியிருக்கும். அரசியல், பொருளாதாரம், ராணுவம் என்று எல்லா துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டுவிடாதாய் சொல்லிக்கொள்ளும் (சொல்லிக்கொள்ளும்!!) ஒரு நாட்டில் சமுகம் இன்னும் வளராமல் மனுவின் வர்ண கொள்கைகளிலே நிலைத்து கிடக்கிறது. சமுக ஆர்வலரும், சுதந்திரக் காற்று(Jina Amucha) எனும் தன் வரலாறை எழுதிய தலித்தான பேபி காம்பிளி “கல்வி கற்று, அரசு வேலை வாய்ப்பு பெற்று ஏற்றம் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் இன்று பிராமணர்களைப் போலவே மாறியுள்ளதை சொல்லி வருத்தப்பட்டு, ‘இன்னும் காலம் கடந்துவிடவில்லை’, இனி மேலேனும் நம் முன்னோர்கள் வாழ்ந்த அவள் வாழ்க்கையை எண்ணிப் பார்த்து, உங்களை படிக்க வைத்தே தீருவோம் என்னும் உறுதியுடன் உங்களை இந்த நிலைக்கு உயர்த்திய அவர்களின் உள்ளக் கருத்தைப் புரிந்துக்கொண்டு, நம் அடுத்த தலைமுறையினரை அம்பேத்கர் காட்டிய வழியில் வெற்றி நடைப் போடச்செய்ய வேண்டும்” என்கிறார். இது தான் இந்த சமுக அமைப்பின் உண்மை நிலை ஒரு தலித் எப்படியாவது தான் வளர்ந்து மனுவின் சாத்திரம் சொல்வதை போன்று வழ முற்படுகிறான் அதை அழிக்க செயல்படுவதில்லை(இதையே இந்துத்துவ அதிகார மையமும் விரும்புகிறது) காரணம் மனுவழி வாழ்வியலையே இந்த கேடுகெட்ட சமுகம் கொண்டாடுகிறது. காலம் காலமாய் அடிமைத்தளையில் வாழும் மனிதன் சமுகம் உயர்குடி வாழ்க்கை என்று சொல்லும் ஒன்றை கனவு காண்பது தவறு என்று யாரேனும் குற்றம் சொல்ல விரும்பினால் குற்றவாளி இந்த சமூகமும் அதன் சாதிய தலைவர்களும் தான். இது தான் நாம் வாழும் தேசத்தின் நிலை, சுதந்திர சமுக அமைப்பின் அறுபத்தஆறு ஆண்டு வளர்ச்சி.
ஒரு மரணத்தில் ஆரம்பிக்கிறது அந்த கதை. மரணித்தவர் அரசின் சுங்க வரித்துறையில் பணிபுரிந்த ஒரு பெரிய அதிகாரி, அவர் ஒரு தலித். மரணமடைந்த தன் நண்பனின் கதையை தங்கள் நட்பினுடே நினைவுக் கூறுகிறார் கதைசொல்லி.ஒரு தலித் அல்லாத கல்லூரி ஆசிரியனுக்கும், தலித் ஆசிரியனுக்கும் இடையேயான நட்பு, தலித் எனும் ஒரே காரணத்துக்காய் சக ஆசிரியர்களால் ஒதுக்கப்படுதல், மாணவர்களின் ஏளனப்பார்வை. தனக்கு நேரும் அவமதிப்புகளை கண்டு ஆவேசம் கொண்டு கல்லூரிக்கு எதிராய் போராடுதல் அதற்கு துணை நிற்கும் நண்பன் என்று ஆரம்பிகிறது பாலனின் நினைவுகள். “ராதாகிருஷ்ணனை தெரியும் இந்திய பிள்ளைகளுக்கு அம்பேத்கர் தெரியவில்லை” எனும் உண்மையை ஆவேசமாய் சொல்கிரவராய் அறிமுகமாகிறார் பாலன். ஆம் தேசிய தலைவர்களில் ஒருவராய், இச்சமுக அமைப்பை மனிதத்தை நோக்கி பயணிக்க வைத்த முக்கிய ஆளுமைகளில் ஒருவராய், இந்த தேசம் இன்று வரை பின்பற்றும் அரசியல் அமைப்பை உருவாக்கியவர் என்று எத்தனையோ இருந்தும் அம்பேத்கரின் இருப்பை திட்டமிட்டு வரலாற்றிலிருந்து மறைக்க செய்வதே முக்கிய நோக்கமாய் பல அரசியல் தலைவர்களும், அதிகார வர்க்கங்களும் முனைப்புடன் செயல்படுவது எல்லோரும் அறிந்ததே அதுனாலே அவரை கீழ்மை படுத்தும் ஓவியத்தை பாடப்புத்தகத்தில் போட்டு கருத்து சுகந்திரம் என்று பேசுகிறார்கள், அது கருத்து சுகந்திரம் என்று வைத்துக்கொண்டால் அம்பேத்கர் தான் இந்திய அரசியல் அமைப்பின் தலைவர் எனும் உண்மையை பாடத்தில் சேர்க்காதது என்ன வகை சுதந்திரம்?? அம்பேத்கரின் இருப்பை இந்திய அதிகாரவர்கங்கள் திட்டமிட்டே மறைக்க முயல்கின்றன, அதுனாலே அவரை தலித் தலைவர் எனும் பார்வைக்குள் அடைக்க முயற்சிகின்றனர், அவர் குறித்தான உண்மைகள் பாட புத்தகங்களிருந்து மறைக்கப்படுகிறது, அவரை எள்ளி நகையாடும் ஓவியங்கள் பேச்சுரிமை எனும் போர்வையில் பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகிறது. இது அம்பேத்கருக்கு எதிரான செயல்பாடுகள் என்று நாம் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கமுடியாது இது வர்ணாசிரமத்தின் தொடர்ச்சியே, தலித்துகளுக்கு எதிரான குருர மனங்களின் பிரதிபலிப்பு.வர்ணாசிரமத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்போதும் தூக்கி பிடிக்கவே ஆசைக்கொல்கின்றனர் ஆட்சியாளர்கள் அதுனாலே இங்கு ஒரு ஊராட்சி தலைவர் கூட தலித்தாய் இருக்க முடியாத, அப்படியே இருந்தாலும் முழுமையாய் சுதந்திரமாய் செயல்பட முடியாத சூழல் நிலவுகிறது, ஒரு தலித் ஜனாதிபதியே ஆனாலும் கோவிலுக்குள் நுழைய சட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது,நாராயணன் குடியரசு தலைவராய் இருந்தபோது திருப்பதி கோவிலிலுள் நுழைய சட்டங்கள் அதன் அறங்காவல் குழுவால் மாற்றியாமிகப்பட்ட உண்மையை நாம் மறந்துவிட முடியாது ( ஏன் இங்கு ஒரு தலித்தால் பிரதமராக முடியவில்லை??) . சமுக ரீதியில் நடைப்பெறும் வன்முறைகள் எத்துனை தூரமோ, அதே அளவு அரசியல் ரீதியாகவும் நடந்தேறுகிறது. அதுனாலே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான எந்த திட்டங்களும் அரசு மன்றங்களில் அனுமதிபெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிருகிறது.
பாலன் நேர்மையானவர் , சூதுவாது இல்லாதவர் எதையும் மனதில் வைத்து பேசாதவர் தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை தைரியமாய் பேசுபவர். இந்த சமுகம் தலித்துகளுக்கு எதிராய் நாடக்கும் அத்துணை வன்முறைகளையும் எதிர்கொள்கிறார், இத்துணைக்கும் அவர் படிப்பறிவில்லாத அடிமையாய் ஆண்டைகளுக்கு கூலி செய்யும் யாரோ முகம் தெரியா மனிதரல்ல, ஒரு கல்லூரியின் ஆசிரியர் இந்த சமுகத்தின் அடுத்த தலைமுறைகளை உருவாகும் மாபெரும் பணியை செய்பவர் இருந்தும் மாணவர்களும் சரி, சக ஆசிரியர்களும் சரி அவரை ஒரு ஆசிரியராகவோ குறைந்தபட்சம் ஒரு மனிதனாகவோ கூட பார்க்க விரும்பவில்லை எல்லா சூழலிலும் அவரின் சாதிய அடையாளம் கொண்டு அவமதிகப்படுகிறார். கல்லூரி நிர்வாகமும் அவரை இரண்டாம்தரமாகவே பார்க்கிறது, கொடுமைகளை கண்டு கொதிக்கிறார், போராடுகிறார், காலம் காலமாய் தன் மக்கள் இப்படியான கொடுமைகளை அனுபவிப்பதை பார்த்தும் அதை முழுதாய் அழிக்கமுடியா இயலாமையில் வெதும்புகிறார். பாலனின் மனம் பெரும் குழப்பத்தில் கதை முழுதுமே பயணிக்கிறது. படித்து அரசு வேளைகளில் இருக்கும் பெரும்பான்மை தலித்துகளின் முகமாய் பாலன் நிற்கிறார். தான் மனிதனாய் மதிக்கப்படாததை அறியாத தலித்தை காட்டிலும் பெரும் தாக்குதலுக்கு அனைத்தையும் அறிந்து இயலாமையில் நிற்கும் ஒரு தலித் ஆளாகுகிறான், அதன் சாட்சியாய் பாலன் நிற்கிறார். பாலனின் முகமாக தான் அண்ணல் அம்பேத்கர் இருந்தார், இந்திய தலைவர்கள் மட்டத்திலும், ஆட்சியாளர்கள் மத்தியிலும் காந்தியும், நேருவும் நேரடியாக இல்லையெனிலும் அவரை இரண்டாம்தரமாகவே பார்த்தனர் அதுனாலே நேருவை காட்டிலும் பெரும் அறிவும் ஆற்றலும் கொண்ட ஒருவரால் இந்த தேசத்தை ஆட்சி செய்ய முடியவில்லை.
“நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மை நம் வாழ்வை திருடியவர்கள் யார் ? இதோ என் முன் நிர்வாணமாய் நிற்கும் இந்த சிறுவனின் ஆடைகளை திருடியவார்கள் யார்? மாட்டை, ஆட்டை, நாயை தொடுபவன் தன்னை போலே இருக்கும் மனிதனை தொடமாட்டானாம் தொட்டால் தீட்டாம். தாழ்த்தப்பட்ட மக்களாகிய நமக்கு விதிகப்பட்டிருகிற வாழ்க்கை “போராடுதல்” ஒன்று தான். “வாழ்கையே போராட்டம்” எனும் வார்த்தை நமக்கு தான் நூறு சதம் பொருந்தும்” இப்படியாய் ஒரு திருமண நிகழ்ச்சியல் தன் மக்களை பார்த்து உரையாற்றுகிறார் பாலன். அதே நிகழ்வுக்கு வரும் ஒரு “சாமி மறுப்பு போராளி” நீங்கள் நாங்கள் என்று பேசுகிறார், தன்னுடைய சாதி பார்க்காத பெருந்தன்மையை நிறுவி தன்னை பெருமைப்படுதிக்கொல்கிறார். “தாழ்த்தப்பட்ட ஒருவனை மேல் சாதிக்காரன் ஒருவன் வீட்டிற்குள் கூப்பிட்டு உட்கார வைத்தால் கூட ‘பார்த்தாயா, என்னுடைய பெருந்தன்மை’ என்று பெருமைப்பட்டுக்கொள்ள வாய்ப்பாக இருக்கிறது. இப்படி உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்தாலும், வீட்டிற்கு வெளியே நிறுத்தினாலும் அவனுக்குத்தான் பெருமை. தாழ்த்தப்பட்டவன் இந்த சமுக கட்டுமானத்தில் என்னமா சிக்கியிருக்கிறான் பார்த்தாயா? என்று தன் நண்பனிடம் சொல்லுகிறான். இது முற்றிலும் உண்மையானது. இதை நாம் வாழ்வின் எல்லா தளங்களிலும் பார்க்கலாம். நான் தலித்துகாய் போராடும் சமுக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் என்று எத்தனையோ பேர் அலைகின்றனர். . நான் சாதிய வேறுபாடுகள் பார்க்காமல் நட்பு கொள்பவன், என் வீட்டுக்கு எல்லா சாதியினரும் வரலாம் என்று எத்துனை நண்பர்கள் பெருமை பட்டுக்கொல்கின்றனர், இப்படியான மனிதர்களையே நாம் அதிகம் சந்திக்கிறோம். நான் எந்த நோக்கத்திலும் கேட்கவில்லை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்ல வேண்டாம் நீங்கள் என்ன சாதி? என்று கேள்வி கேட்கும் பல மனிதர்களை தினம், தினம் சந்திக்கிறோம்.
இதில் நிஜமாகவே சாதியத்துக்கும், இந்துத்துவ அமைப்புகளுக்கும் எதிராய் போராடும் மனிதர்களும் தலித் அல்லாத ஒரே காரணத்துக்காய் தலித் முகமுடி அணிதவராய் அடையாளம் காட்டப்படும் அவலமும் நடக்கிறது. நிச்சயம் ஒரு தலித்தின் துயரை ஒரு தலித்தாலே முழுமையாய் உணரமுடியும், அதை எதிர்த்து முழுதும் போராடமுடியும், அதற்காய் தலித் அரசியலை ஆதரிப்பவர், சாதிய கட்டமைப்பை எதிர்பவர் ஒரு தலித்தாக இருக்கவேண்டும் என்பதில்லை.பெரியார் தலித்தல்ல ஆனால் சாதியத்துக்கு எதிராய் பெரியாரின் போராட்டங்களே தலித்துகளுக்கு தமிழகத்தில் ஓரளவு விடுதலை பெற்றுத்தந்தது. ஆனால் இன்று நம் சமுக அமைப்பில் அப்படி போராடும் பலரும் முகமுடி போட்டவர்கள் என்றே அடையாலப்படுதப்படுகின்றனர் என்பது பெரும் கொடுமை.
தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு ஒதுகப்படவேண்டிய விரிவுரையாளர் பதவியை நீண்டகாலம் “டியூட்டராக” வேலைபார்க்கும் ஒருவருக்கு ஒதுக்க முடிவுசெய்கிறது ஆசிரியர் சங்கம், அதற்கான தீர்மானத்தை எதிர்க்கும் பாலன், இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராய் செயல்படும் ஆசிரியர் சங்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவாதாய் சங்க கூட்டத்தில் வாதிடுகிறார். நட்பு, பழக்கம் என்று பல காரங்களை கொண்டு அவரை சரிகட்ட ஆசிரியர் சங்கம் முயற்சிக்கிறது, பாலன் தன் பிடியில் உறுதியாய் நிற்கிறார், அதுனால் தீர்மானத்தை கைவிடுகின்றனர் ஆசிரியர் சங்கத்தினர். இப்படி தன்னால் முடிந்த மட்டிலும் சாதிய அநீதிகளுக்கு எதிராய் போராடுகிறார். கதை பாலனின் வாழ்வு முழுதும் பயணிக்கிறது அவரது குடும்பம், வீட்டு சூழல்,தலித் அடையாளத்தை மறைக்க தன்னை ஒரு சோதிடனாய் அடையாளப்படுத்திக்கொள்ள முயலும் பாலனின் அப்பா, காதல் கதைகள். பாலனின் நெருங்கிய நண்பரான கதைசொல்லி கதையின் பயணம் முழுதும் தனக்கும் பாலனுக்குமிடையே இருக்கும் அற்புதமான அந்தரங்கமான நட்புகுறித்தும், சமுகத்தில் தன் நிலைக்கண்டும், தன் மக்கள் நிலை கண்டும் வெதும்பும், கோபம் கொள்ளும் பாலனின் சிந்தையையும் மிகவும் அழகாய் சொல்லிச்செல்கிறார். தன் முன் பாலன் தேனீர் கடையில் சந்திக்கும் இரட்டை குவளை அடைக்குமுறை அதுனால் அந்த அவமானத்தால் பாலன் அடையும் துயரம் என்று ஆசிரியரின் விவரிப்புகள் துயர் அழகியல்.
தேர்வு எழுதி சுங்க துறையில் உயர்அதிகாரியாய் அமரும் பாலன் தான் தலித் எனும் காரணத்துக்காய், நேர்மையாய் இருபதற்காய் பந்தாடப்படுகிறார் பாலன், எங்கு சென்றாலும் அவரின் தலித் அடையாளம் அவருடனே செல்கிறது. எல்லா ஊர் மக்களும் சதி அடையாளத்தை முதன்மை படுத்துவதில் ஆர்வம் கொண்டே இருகின்றனர், எல்லோருக்கும் அடுத்தவர் என்ன சாதி என்று அறியும் ஆவல் இருக்கவே செய்கிறது, இதில் படித்தவன், படிக்காதவன் எனும் பாகுபாடுகளில்லை. மெத்த படித்தவர்கள் என்று சொல்லித் திரியும் பலரும் தங்கள் சாதிய அடையாளங்களுடன் வெளியே அலையவே விரும்புகின்றனர். அவர்கள் அலுவலக சூழலில் அவர்கள் சாதிய மக்களுடன் சேர்ந்து நிற்கவே விரும்புகின்றனர். இப்படியான சூழலில் தான் பாலன் அதிகாரியாய் அதுவும் நேர்மையான லஞ்சம் வாங்காத மனிதராய் வாழ்கிறார் இது எல்லாமே அவருக்கு எதிராய் திரும்புகிறது. பாலனின் மனைவி பாலன் குடும்பம் தங்களுடன் வாழ்வதையோ, தங்கள் வீட்டுக்கு விருந்தினராய் வந்துப்போவதையோ விரும்பாதவளாய் இருக்கிறாள், இது பாலனுக்கு மேலும் அழுததை தருகிறது. அவரின் கோபம், ஆற்றாமை எல்லாம் சேர்ந்து பாலனின் மனநிலையை பாதிக்கும் அளவு செல்கிறது. இறுதியில் பாலன் காரணம் தெரியாமலே செத்துப்போகிறார்.கல்வி, பணம், அரசு பதவி என்று எத்துனை வந்தாலும் ஒரு தலித் தலித்தாகவே மரணிக்கிறான். தன் மக்கள் குறித்தான அவரின் கவலைகள், கனவுகள் அனைத்தும் அவருடனே மறைந்துப்போகிறது.சமுக கட்டமைப்புகள் சக மனிதனை மனிதனாய் பார்க்க மறுக்கிறது எனும் உண்மையை இப்பிரதி முழுதும் வேறு வேறு சம்பவங்களின் ஊடாக சொல்கிறார் ஆசிரியர். தனி வாசகனாய், ஒரு தலிதல்லாதவனாய், பிறப்பின் காரணமாய் ஆதிக்க சாதியின் அடையாளங்களை தாங்கிய ஒருவனாய் இந்த பிரதியை படித்து முடித்தவுடன் ஒரு விடயம் மிகதெளிவாய் புரிந்தது. ஒரு தலித்தை தலித் என்றே அடையாளம் காட்டுகிறது இந்த சமுகம். ஆங்கில அரசிடமிருந்து விடுதலை வாங்கி இந்தியா மலர்ந்த பின்பும் ஒரு தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கிறான் அவனை இந்தியனாய் மாற்ற எந்த அரசும், அமைப்பும் முயற்சிக்கவில்லை. அதே போல் மொழி ரீதியான அடையாளத்திலும் ஒரு மராத்தியான அம்பேத்கர் தலித்தாகவே இருக்கிறார். தமிழனான் பாலன் தலித்தாகவே இருக்கிறார், எனவே நிச்சயம் எத்துனை வகையான அரசியல் தீர்வுகளும் விடுதலைகளும் வந்தாலும் சமுக விடுதலை மட்டுமே ஒரு தலித்தை மனிதனாய் அடையாளப்படுத்தும். இதையே இந்த புத்தகமும் பேசுகிறது. தமிழில் வந்திருக்கும் பிரதிகளில் படிக்கபட வேண்டிய ஒன்று ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம்.
இந்த பிரதியல் நான் பலயிடங்களில் அம்பேத்கரை குறிபிட்டு, கதையின் மைய பாத்திரத்துடன் ஒப்புமைபடுத்தி பேசுகிறேன் காரணம் நான் அறிந்தவரை இந்திய சமுகத்தில் முதல் தலித் அதிகாரி, அமைச்சர், ஒட்டு மொத்த மக்களால் அறியப்பட தலைவர் அவர். விடுதலை அடையாத அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் அவர் சந்தித்த அதே துயரங்களை, அவமதிப்புகளை இன்றுவரை ஒரு தாழ்த்தப்பட்ட மனிதன் சந்திக்கிறான். அவன் படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், அரசியல்வாதி என்று எத்துனை பாத்திரங்களை வகித்தாலும் அவனுக்கு அந்த துயரங்கள் தொடரவே செய்கிறது. திருமாவின் பல அரசியல் செயல்பாடுகளை எதிர்ப்பவன் என்றாலும் அவரின் அடிப்படை கொள்கையான தலித் விடுதலையில் அவர் எந்த சமரசமும் செய்யவில்லை என்று என்னால் சொல்லமுடியும் சமிபத்தில் அவரிடம் கேட்டகப்பட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலிது ” தலித் ஊராட்சி தலைவரை தரையில் உட்காரவைத்து, மேல வளவு முருகேசன் தலையை வெட்டி கால்பந்தாடிய, காட்டாறு ஊராட்சி தலைவர் ஜெயந்தியை சுதந்திரதினத்தில் மூவண்ண கொடி ஏற்றவிடாமல் தடுத்து என்று கேவலமான் சாதிய அடக்குமுறைகள் பெரியார் பிறந்த இந்த தமிழகத்தில் தான் நடந்தது, இப்படியான நிலையில் தலித் ஒருவர் முதல்வராக முடியுமா என்பது பதிலில்லா கேள்வியே. இங்கு தலித் தலைவர் ஒருவரை மற்ற தலைவர்களை போல் தலைவராய் அங்கீகரிக்கும் நிலைக்கே போராட வேண்டியுள்ளது” . திருமாவின் பதில் யாரோ ஒருவரின் பதில் அல்ல, தமிழ்நாட்டின் முக்கியதலைவர் ஒருவரின் பதில். இன்னும் எத்துனை தூரம் இந்த சமுகம் மனிதத்தை நோக்கியான பயணத்தில் செல்லவேண்டியுள்ளது என்பதை நிருபிக்கும் பதில் அது. இது எல்லா விடயங்களையும் ஒன்று சேர்ந்து பேசுகிறது இந்த புத்தகம், பாலனின் கதை ஒரு தலித் இலக்கியமா ? இல்லை மொழி அழகியல் நிரம்பிய ஆளுமையா ? இசங்களின் இலக்கியமா ? இந்த கேள்விகளுக்கு நிச்சியம் என்னிடம் பதிலில்லை காரணம் எனக்கு தெரியவில்லை, அனால் நான் இப்பிரதியின் ஆரம்பத்தில் சொல்லுவதை போல் மனிந்த அவலத்தை பேசுகிறது, சக மனிதனின் துயர் வாழ்வை சொல்லுகிறது அதுமட்டும் நிச்சயம் சொல்லமுடியும்.
“பின்னொரு காலத்தில் சௌந்தர் இறந்துப்போனால் அவர் தலித் சுடுகாட்டிலே அடக்கம் செய்யப்படுவார். அவரின் படிப்போ, வேலையோ அவரை பொது சுடுகாட்டில் படுக்கவைக்காது என்பதே நிஜம். அதற்காய் கல்வி, வேலைவாய்ப்பு இவையெல்லாம் வீண் என்று சொல்லவில்லை எத்துனை தூரம் அரசியல், சட்ட விடுதலையை தலித்துகள் பெறுகிறார்களோ அதே தூரம் சமுக விடுதலையும் அவசியம் அப்போதுதான் அணைத்து மனிதர்களும் ஒரே சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுவர், ஒரே குவளையில் தேனீர் அருந்துவர், சாதிய சுவர்கள் உடையும். மனிதன் மனிதனாய் மதிக்கப்படுவான்”
நன்றி எதிர்
Comments
Post a Comment