Skip to main content

-கிளி சோசியத்தில் இல்லாமல் போன கிளியின் படம்!

          நான் கிளி சோசியக்காரனாக மாறியது மிகவும் எதார்த்தமான ஒரு நிகழ்வு. ஆனால் அந்த சம்பவம் நடந்தன்று நிச்சயமாக தெரியாது நான் கிளி சோசியனாவேனென்று - அந்த கிளி சோசியக்காரன், கிளி எடுத்துப்போட்ட கமலஹாசன் சீட்டை பார்த்து ”கமலு படம் வந்திருக்கு.. உச்ச யோகம்…. மூணுல சனி, ஏழுல சுக்கிரன், ஒன்னுல குரு…நீ பெரிய நடிகனா வருவ தம்பி” என்று சொன்னான்.

xxxxxxx

        அடிவானம் வெளுக்க தொடங்கிய ஒரு அதிகாலையில் தான் நான் திருப்பத்தூர் செல்லும் LRN பஸ்சில் ஏறினேன். அதிகாலை என்பதால் கூட்டம் பெரிதாக இல்லை, இருந்த 10-15 பேரும் தூக்கத்தில் இருப்பதை ஒவ்வொரு தலைகளும் ஒவ்வொரு திசையில் மடங்கி கிடந்ததிலே அறிய முடிந்தது. காலியாக இருந்த ஒரு இருக்கையின் சன்னலோரத்தில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் பேருந்தும் வேகமெடுத்தது, மிக வேகமாக முகத்தை தழுவி கடந்துக்கொண்டிருந்த அதிகாலை குளிர் காற்றின் விசையை தாங்க முடியாமல் சன்னல் கண்ணாடிகளை இழுத்து மூடினேன். தலைக்கு மேலிருந்த ஒலி பெருக்கியில் “வந்தேண்டா பால்காரன், பசு மாட்ட பத்தி பாட போறேன்” என்று ரஜினியின் குரலாக SPB பாடிக்கொண்டிருந்தார், யாருடைய குரலாக இருந்தால் நமக்கென்ன அது தலைவனின் குரல் - என் உயிரின் குரல். மெய்மறந்து அந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன், எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பாடல். கிளி சோசியனான நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்பதையும் சொல்லி தான் ஆக வேண்டும்.ஏன் சொல்ல வேண்டும்? ஏனென்றால் நான் ரஜினி ரசிகன்!

 மனதின் படபடப்பை தலைவனின் பாட்டால் கூட தடுக்க முடியவில்லை. உலகம் முற்றிலுமாய் வெளுத்திருந்தது, அரூரை தான்டி பேருந்து விரைந்துக்கொண்டிருந்தது. இப்போது அனேக இருக்கைகள் நிறம்பியிருந்தன. அப்பாவும், அம்மாவும் இன்னேரம் விழித்திருப்பார்கள்..பீயிருக்க போகும் பங்களா காடு, மாமன் வீடு என்று என்னை தேடும் படலம் ஆரம்பித்திருக்கும். மாமன்கள் நான் எப்போதும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் விளையாட போகும் சின்ன ஏரி பக்கம் தேடி போயிருப்பார்கள். நினைக்க நினைக்க அழுகையாக வந்தது ஆனால் அழவில்லை. அழவில்லை என்று நான் நம்பினாலும் என்னையறியாமல் கண்ணீர் அருவி போல் வழிந்துக்கொண்டிருந்தது.எ ன்ன செய்துக்கொண்டிருக்கிறேன்?நான் ஏன் இப்படி வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன்?அப்பா, அம்மா என்ன செய்வார்கள்?இப்படி போனால் நான் எங்கு போவேன்?என்ன ஆவேன்?யாராவது என்னை கொன்றுவிட்டால்?இல்லை பிள்ளை பிடிப்பவர்கள் என்னை பிடித்து யாரிடமாவது விற்றுவிட்டால்? கோடான கோடி கேள்விகள் மூளையை துளைத்துக்கொண்டிருந்தன.இன்னொரு பக்கம் கையில் இருக்கும் அம்மாவின் தங்க மோதிரத்தை எப்படி?எங்கு? விற்பது எனும் கேள்விகளும் எழுந்துக்கொண்டே வந்தன, ஆனால் எப்படியும் விற்றுவிடலாம் எனும் அதித நம்பிக்கை இருந்தது. திருப்பத்தூர் வந்து இறங்கிய போது மணி ஒன்பது. நேராக அடகு கடைகளை தேடும் படலம் ஆரம்பமானது, 3-4 கடைகள் அலைந்தும் சிறுவன் என்பதால் யாரும் வாங்க மறுத்தார்கள். எப்படியோ ஒரு சேட்டு கடையை கண்டுபிடித்து விற்றேன், அந்த சேட்டு 2000 ரூபாய் கொடுத்தார்.வாங்கி எடுத்துக்கொண்டு நேராக பேருந்து நிலையம் வந்தேன்.சென்னை செல்லும் பேருந்து கண்ணில் தென்பட்டது. யோசனைகள், கேள்விகள் அனைத்தும் பறந்தோடின, கண்களிலும், உடம்பிலும் ஆயிரம் கோடி மின்னல்கள். ஒருவித புத்துணர்ச்சி! தலைவன் கூட பஸ் கண்டக்டரா இருந்தபோது சென்னைக்கு ஓடி வந்தவர் தானே. உறுதியுடன் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்..பேருந்து சென்னையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. கிளி சோசியக்காரன் சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தன. ”கமலு படம் வந்திருக்கு.. உச்ச யோகம்…. மூணுல சனி, ஏழுல சுக்கிரன், ஒன்னுல குரு…நீ பெரிய நடிகனா வருவ தம்பி”

xxxxxxx

     “Hey, dude what the hell are you doing” அதிகாரியின் வார்த்தைகள் வெகு காட்டமாக வெளிப்பட்டன.

“What happened, Homiyaar? Anything went wrong? ” தயங்கியபடி கேட்டான் அவன்.

”Went wrong? 100 calls are in queue, where you were all these time?

“I just went to rest room and came back”

”Are you suffering for diabetics? Half an hour once you keep occupying the rest room. Go back to your seat man” என்றான் அதிகாரி கடுமையான முகத்துடன்.

அதிகாரியை பார்த்து அசட்டு புன்னகையுடன் தன் இருக்கைக்கு சென்றான் அவன்.

அவனுக்கு சில பல வாரங்களாய் பகலில் தூக்கம் பிடிப்பதேயில்லை, கடுமையான வெயில், அடிக்கடி நின்று போகும் மின்சாரம், பகல் பொழுதின் இரைச்சல்கள், அங்கும் இங்கும் அறைக்குள்ளே எப்போதும் நடைப்போட்டுக் கொண்டிருக்கும் அறை தோழர்கள் இப்படி அவனின் தூக்கத்தை பறிக்க பல கைகள் எப்போதும் தயாராகவே இருந்தன. மேலும் அதிகபடியான பணி சுமையும், மனதில் எப்போதும் நீந்திக்கொண்டே இருந்த ஒரு வித பயமும் அவனை தூங்க விடாமல் தடுத்தன. தூக்கத்துக்கு மிகுதியாக ஏங்கினான, எப்படியாவது தூங்கிவிட வேண்டும் எனும் வெறி அவனுள் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. கண்கள் உரமேறி சிவந்தே கிடந்தன. மனமும், உடலும் பிறழ்ந்த நிலையில் தூக்கத்தை தேடி திரிந்துக்கொண்டிருந்தன வெவ்வேறு பாதைகளில். தூங்கிவிடும் பெரும் முயற்சியில் தினமும் புட்டி புட்டியாக விஸ்கி வாங்கி குடித்தான், ஆனாலும் தூக்கம் வந்ததாயில்லை.

இந்த வேலைக்கு சேர்ந்த நாளில் ஆரம்பித்தது இது, மாதத்துக்கு ஒரு முறையேனும் இப்படியான சித்ரவதையை அனுபவித்தே ஆக வேண்டும். மாதம் 19000 சம்பளம், தினமும் மாலை 6 முதல் காலை 6 வரையான 12 மணி நேர வேலை..வாரத்தில் ஏதாவது 2 நாள் வாராந்திர விடுமுறை அதை தவிர்த்து வருடத்துக்கு 10 நாட்கள் விடுமுறை – அத்தனை நாட்களும் அமெரிக்காவின் விடுமுறை நாட்களாக தான் இருக்கும். Thanks giving dayவும், colombus dayவும் கொண்டாட்ட தினங்களாய் மாறிபோயின. பொங்கலும், தேர் நோம்பியும் மறந்துப்போன கதையாகிவிட்டிருந்தது அவனுக்கு. கார் வீட்டுக்கே வந்து வேலைக்கு கூட்டி சென்று, திரும்பி கொண்டுவந்து விடும். அதிகாலை 6 மணிக்கு வந்து ஆடைகளை கூட களையாமல் படுக்கையில் விழுந்தால் அவ்வுளவுதான். சோறு, தண்ணீர் எதுவும் கிடையாது, மாலை 4.30 மணிக்கு ஒலிக்கும் செல்போனின் அலார மனிக்கு அடித்து பிடித்து எழுந்து குளித்துவிட்டு அறையின் மூலையில் குப்பை குவியலாய் கிடக்கும் ஆடைகளில் மிகவும் குறைவான அழுக்குடன் தெரியும் ஒரு ஜீன்சையும், டீசர்டையும் எடுத்து அதற்கு முடிந்தமட்டில் செண்ட் அடித்து வாசனைமிக்கதாக்கி அணிந்துக்கொண்டு, மற்றொரு மூலையில் கிடக்கும் ஒரு வாரத்துக்கு முன் தின்று மிச்சம் கிடக்கும் பிரியானி டப்பா, சில நிரோத்துக்கள், மது குடுவைகள், பிலாஸ்டிக் குப்பைகள், காலி குளிர்பான பாட்டில்களுக்கு நடுவே எங்கோ கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சப்பாத்துக்களை எடுத்து மாட்டினால்.. காரின் ஓட்டுனரிடமிருந்து missed call வரும், அது தான் அவரின் வருகைக்கான அறிவிப்பு, அடுத்த 5 நிமிடங்களில் காருக்குள் இருக்க வேண்டும் இல்லையெனில் அவர் போய்விடுவார். பல நேரங்களில் 5வதோ அல்லது 6வதோ நிமிடத்தில் தான் நான் காருக்குள் ஏறுவான்.ஏற்கனவே இருக்கும் சக ஊழியர்களின் பார்வையில் கோபம், இளக்காரம் எல்லாம் தென்படும்.எதையும் கண்டுக்கொள்ளாமல் Head setயை எடுத்து காதில் மாட்டிக்கொள்வான் இவன்.

சில நாட்கள் 24 மணி நேரம் கூட தூக்கம் வராமல் கழியும். பகலில் உறக்கம் வராது, இரவில் வேலை - தூங்க முடியாது. சரியாக 6 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்ததும் அடையாள அட்டையை அதன் இயந்திரத்தில் பதித்துவிட்டு, கணினியின் முன் அமர்ந்து, தலைக்கு Head phonesசை மாட்டினால் அழைப்புகள் நிற்காமல் வரும். அவன் இங்கிருந்து அமெரிக்கர்களின் பழுதான கணிப்பொறிகளை சரி செய்து தர வேண்டும். அழைப்பவருடன் என்ன பேசவேண்டும், எப்படி அனுகவேண்டும் எப்படி வசவுகளை சிரித்தப்படி வாங்கவேண்டும் என்று எல்லாவற்றுக்கும் எழுதப்பட்ட திரைக்கதை ஏற்கனவே இருக்கும் “Thank you for calling us, this is Mike. How may I assist you today?” இப்படிதான் ஆரம்பிக்கும் அந்த திரைக்கதையின் வசனம். எல்லா தொலைபேசிஅழைப்புகளுக்கும் இதே வசனத்தை தான் திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் அது தான் அவன் வேலைக்கான சட்டம். பெரும்பாலான அழைப்பாளர்கள் தங்கள் முழு கோவத்தையும் போனில் மறுபக்கம் இருப்பவன் மீது கண்பிப்பார்கள்..அவர்களின் அந்தனை வசவுகளையும் புன்னகையுடன் கடந்து போவான் இவன். ஏன் உனக்கு கோபமே வராதா என்று யாராவது கேட்டால்..எனக்கு வசவுகள் பழகிவிட்டது, பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால பேசும் ஒருவருக்காக நாம் ஏன் நம் ரத்த அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பான். மூச்சு விட கூட நேரம் இருக்காது, பகலில் தூக்கம் இல்லாத நாட்களில் தூக்கம் கண்களை இறுக்கும் ஆனாலும் தூங்க முடியாது. பக்கத்தில் தண்ணீரை வைத்தப்படி கண்களில் ஒற்றி எடுப்பான் இல்லையேல் அவனுக்கு அவனே கிள்ளிக்கொள்வான் சில சமயம் கண்ணங்களில் அறைந்துக்கொள்வான், இப்படியான நாட்களில் எப்படியும் 10 கப் காப்பியாவது குடித்துவிடுவான். அவன் மட்டும் அல்ல அங்கு வேலை செய்யும் பெரும்பான்மையானோர் அப்படி தான் செய்தார்கள் அவனது அதிகாரி உட்பட. மிகவும் முடியாத நாட்களில் இரவு உணவுக்கு செல்லாமல் அந்த அரை மணி நேரம் கழிப்பறையில் உறங்குவான். மேற்கத்திய பாணியிலான அந்த கழிப்பறையின் மூடியை இழுத்துவிட்டால் உட்கார வசதியாக இருக்கும், ஒய்யாரமாக அமர்ந்து அருகில் இருக்கும் சுவருக்கு முட்டு கொடுத்தப்படி உறங்கிப்போவான். இந்த உறக்கத்துக்கு பிரதிபலனாக சாப்பிடும் ஒரு வேளை உணவையும் விட வேண்டும். நேரத்துக்கு நேரம் ஒழுங்காக சாப்பிடுவதில்லை என்று தான் பெயர், தின்னும் ஒரே ஒரு நேர சாப்பாடும் பீட்சா, சீஸ் சான்விட்ச், பாஸ்தா, கோக், செஸ்வான் நூடுல்ஸ், ஆந்திரா மெஸ் புல் மீல்ஸ் என்று நிறம்புவதால் உடம்பும், தொப்பையும் கூடிக்கொண்டே வந்தது. அதை மட்டும் எதனை கொண்டும் கட்டுபடுத்த முடியவில்லை.அவ்வப்போது சில நண்பர்கள் உடற்பயிற்சி கூடம் செல்வதை கேட்டு இவனும் ஆர்வம் கொள்வான் ஆனால் தூக்கமும், அசதியும் அவனை வென்றுவிடும்.

xxxxxxx

       6 மணி நேர பயணத்துக்கு பின் பேருந்து சென்னை பாரிஸ் பஸ்நிலையத்தை அடைந்தது. வண்டியை விட்டு இறங்கியதும், கடுமையான பசி அடிவயிறை சுண்டி இழுக்க அருகிலிருந்த சிறிய உணவகத்துக்குள் நுழைந்தேன். மேலும் கீழும் பார்த்த பரிசாரகன் என்ன வேண்டும் என்பதை போல் பார்த்தான், வீட்டை விட்டு ஓடிவந்த பொடியன் என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும் அவன் பார்வையும் ஏளன புன்னகையும் அதை தான் சொன்னது. இரண்டு பரோட்டாக்களை வாங்கி தின்றுவிட்டு கோடம்பாக்கம் செல்லும் பேருந்தை தேட பேருந்து நிலையமெங்கும் அலைய ஆரம்பித்தேன். எப்படியோ விபரம் கேட்டு கோடம்பாக்கம் செல்லும் வழியை கண்டுபிடித்து அதற்கான பேருந்தில் ஏறினேன். ரசிகர் மன்றத்தில் தான் அடிக்கடி சொல்வார்களே சினிமாக்காரர்கள் எல்லாம் கோடம்பாக்கத்தில் தான் இருப்பார்கள் என்று. கோடம்பாக்கம் சென்றால் எப்படியும் யாராவது ஒருவரை பார்த்துவிடலாம். ரஜினி கமல் என்று இல்லாவிட்டாலும் அஜித், விஜய், அர்ஜூன் என்று ஒருவரை பார்த்துவிட்டால் போதும் என் நாடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடிகனாகி விடுவேன். எனக்கு நானே ஒரு காட்சியை கற்பனை செய்து, கற்பனையிலே 2-3 முறை நடித்தும் பார்த்துக்கொண்டேன். ஒரு மணி நேர பயணத்துக்கு பின் லிபர்டி நிறுத்தத்தில் இறங்கினேன், அந்த ஒரு மணி நேரம் முழுவதும் மனதில் கற்பனையின் சிறகுகள் கட்டுக்கடங்காமல் பறந்துக்கொண்டிருந்தன.. கேமரா, நடிப்பு, நடிகைகள், வரிசையில் காத்து கிடக்கும் ரசிகர்கள், பெரிய வீடு, கார், பணம், வெளிநாடுகள்.. எத்தனையோ! இப்படியாக நான் சென்னை வந்து சேர்ந்தாகிவிட்டது நான் கணவு கண்ட கோடம்பாக்கம் வந்தாகிவிட்டது ஆனால் அப்போது கூட எனக்கு தெரியாது நான் கிளி சோசியம் தான் சொல்லப்போகிறேன் என்பதும் எனக்கும் கோடம்பாக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும்.

2 நாட்கள் தேடியும் எந்த ஒரு சினிமா நிறுவனத்தின் வாசலை கூட நெருங்க முடியவில்லை.ஏற்கனவே ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்தின் வாசல்களிலும் ஆயிரகனக்கான மனிதர்கள் காத்துக்கிடந்தார்கள். நடிகராக, இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, இப்படி எல்லாவற்றுக்கும். என் நம்பிக்கை பெருமளவில் குழைந்து தான் போயிருந்தது. சரியான சாப்பாடு இல்லை, தூங்க ஒரு இடமில்லை – பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள் என்று கிடைக்கும் நேரத்தில் உறங்குவதோடு சரி. மனமும்,ஆன்மாவும் ஊருக்காகவும், அம்மாவின் சோற்றுக்காகவும் ஏங்கி கிடந்தது ஆனாலும் ஊருக்கு திரும்பி போவதை ஏற்க முடியவில்லை. கையில் இருப்பது எல்லாம் மிச்சம் இருக்கும் 1000 ரூபாய், எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்த டிப்ளமோ பட்டையம். கல்லூரியில் உடன் படித்த நண்பனின் முகவரியை தேடி கண்டுபிடிக்க 3 நாட்களானது, தங்குவதற்கான சுமை தீர்ந்தது என்று நம்பினேன். அன்று இரவு நண்பனின் சந்தான குறுகிய அறையில், 7 நாட்களுக்கு பின் ஆழ்ந்து உறங்கினேன். ஆழ்ந்த உறக்கத்தின் கனவிலும் வந்து கிளி சோசியக்காரனின் சொற்கள் ”கமலு படம் வந்திருக்கு.. உச்ச யோகம்…. மூணுல சனி, ஆறுல சுக்கிரன், ஒன்னுல குரு…நீ பெரிய நடிகனா வருவ தம்பி”

xxxxxxx

         பெருநகரத்தின் வாழ்க்கைக்குள் வந்து 10 வருடங்கள் கடந்துப்போயிருந்தது. தொட்டால் ஒடிந்துவிடும் அளவில் சிறுவனாக வந்த ஒருவன், கமல் அலுவலகத்தையும், இயக்குனர் சங்கரின் அலுவலகத்தையும் கோடம்பாக்க வீதிகளில் தேடி திரிந்த ஓருவன் இன்று தொப்பையும், தொந்தியுமாக 28 வயதில் தலை முழுமையாக நரைத்துப்போய் வாழ்க்கையுடன் ஓடிக்கொண்டிருக்கிறான் –கமல் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இருக்கிறதென்பதும், சங்கர் அலுவலகம் சாலிகிராமத்தில் இருக்கிறதென்பதும் சமிபத்தில் தான் தெரியும் அவனுக்கு. மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் அவன் வாழ்க்கை அதிகாலை 6 மணிக்கு முடிகிறது, வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரங்கள் “Head phones”சுடனே கழிந்துவிடுகிறது. வாங்கிய வீட்டு கடனையும், காருக்கான கடனையும், கடனட்டைகளின் மீதங்களையும் கட்டுவதிலே மீதி வாழ்க்கையும் நீர்த்துவிடுகிறது. நடிகனாக அலைந்த1 வருடத்தின் முடிவில் சோற்றுக்காக, அமெரிக்க கணிபொறிகளின் குறைகளுக்கு தீர்வு சொல்லும் கிளி சோசியனாக மாறினான்! ”கிளி சோசியக்காரனாக” இல்லை சொன்னதை திரும்பி திரும்பி சொல்லும் கிளிபிள்ளையாகவே மாறிப்போயிருந்தான். வீதிகளிலோ, கடற்கரைகளிலோ கிளி சோசியக்காரர்களை பார்க்க நேரும் போதெல்லாம் அந்த வார்த்தைகள் மீண்டும் அவன் காதுகளில் எதிரொலிக்கும் ”கமலு படம் வந்திருக்கு.. உச்ச யோகம்…. மூணுல சனி, ஆறுல சுக்கிரன், ஒன்னுல குரு…நீ பெரிய நடிகனா வருவ தம்பி”

xxxxxxx

        நான் என்ன ஆவேன் என்பது குறி சொன்னஅந்த நீலவண்ண கிளிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் நான் செய்ய போகும் தொழிலை அடையாளம் காட்டும் ”கிளி”யின் படத்தை எடுக்க, சோசியகாரன் அடுக்கியிருந்த படங்களின் வரிசையில் கிளியின் படம் இருக்கவில்லை.

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...