Skip to main content

மரணங்கள்/படுகொலைகள்

மரணம்/படுகொலை 1: கேரளாவில், மது என்னும் தொல்குடி இளைஞர் சோற்றுக்கான பொருட்களைத் திருடிய குற்றத்திற்காய் படுகொலை செய்யப்பட்டார், அவரது மரணம் சமூகத்தின் அறச்சீற்றத்தையும் கிளறிவிட்டது. சமூக ஊடகங்களில் உணவுக்காக ஒருவன் திருடியது குற்றமா, அதற்கு தண்டனை மரணமா என்று நிலைத்தகவல்களையும், ட்வீட்களையும் பதிவு செய்தோம், மது தாக்கப்படும் காணொளியினைப் பகிர்ந்தோம், கைகள் கட்டப்பட்டிருக்கும் மதுவின் சிற்பப் புகைப்படத்தை பகிர்ந்தோம், பினராய் விஜயனும், மம்மூட்டியும் கூட தங்கள் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தினார்கள். மம்மூக்கா ஒருபடி மேலே சென்று அவனை ஆதிவாசி என்று சொல்லாதீர்கள் அவன் என் சகோதரன் என்றார். இந்த சமூகத்தில் மனிதம் செத்துவிட்டது என்றோம், நாம் அனைவரும் ஒன்றாக அவரவர் குரலில் ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றவாளி ஆக்கினோம்.

மரணம்/படுகொலை 2: விழுப்புரத்தில் தலித் சிறுவன் ஒருவன் கொடூரமாய் படுகொலை செய்யப்படுகின்றான். அவனது சகோதரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தாக்கப்படுகின்றார், அவர்களின் தாயும் கடுமையாக தாக்கப்படுகின்றார். அம்மாவும், மகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒரு தலித் குடும்பம் ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுகின்றது, அதில் ஒரு குழந்தை கொடூரமாக கொல்லப்படுகின்றார். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சமூக ஊடகங்கள், காட்சி/அச்சு ஊடகங்கள் அனேகமாக ஊமையாக இருந்தன அல்லது இப்படி இரு சம்பவம் நடந்தது எனும் உணர்வற்று எளிமையாக அதை கடந்துவிட்டன. வழமை போல் அரசியல் கட்சிகள் கண்டன அறிவிப்புகளை வெளியிட்டன. சிறப்பம்சமாக அன்புமணி ராமதாஸ் பாமக சார்பில் கண்டனை அறிக்கை வெளியிட்டார். தலை பிளந்து முகம் சிதைந்த நிலையில் சடலமாய் இருந்த அந்த குழந்தையின் பிணம் நம்மின் பொது மனசாட்சியினை உலுக்கவில்லை.

மரணம் 3: அந்த ஞாயிறு காலை இந்தியர்களுக்கு அப்படி விடிந்திருக்க வேண்டியதில்லை தான். தொலைக்காட்சித் திரைகளிலும், அலைபேசி திரைகளிலும் தெரிந்த அந்த மரண செய்தியை பார்த்து பல கோடி இந்தியர்கள் துயருற்றனர். கோடிக்கணக்கான “RIP”க்கள், பல நூறு செய்திக் கட்டுரைகள், செய்திக்காட்சிகள், விவாதங்கள். ஒரு தேசமே சோகம் கொள்வதாய் அமைந்தது அந்த நடிகரின் மரணம். மதுவுக்கு அறச்சீற்றம் கொண்டவர்களும், விழுப்புரம் குழந்தையின் மரணத்தை செய்தியாகக் கூட அறியாமல் கடந்தவர்களும் தாங்கள் நேசித்த நடிகரின் மரணத்துக்காய் பெருந்துயருற்றனர்.

மரணம்/படுகொலை 4: ஹாசினி எனும் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துப் படுகொலை செய்த தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அறிவித்துள்ளது நீதிமன்றம். தஷ்வந்துக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை சமூகமாய் கொண்டாடி வரவேற்றோம், நீதி கிடைத்திருப்பதாய் மகிழ்ச்சி அடைந்தோம். மரண தண்டனைகளுக்கு எதிராகப் பேசும் அநேக மனித உரிமை போராளிகள் கூட இதுவரை மௌனம் காக்கின்றனர். மரண தண்டனை தண்டனையா? தஷ்வந்தை கொல்வதால் இந்த சமூகம் மாறிவிடுமா? அப்படி என்றால் டெல்லி நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டவுடனே ஒட்டு மொத்த இந்திய ஆண் சமூகமும் திருந்தியிருக்க வேண்டுமே. குடும்பத்தில் கணவர்கள் மனைவிகள் மீது செலுத்தும் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக பேசமுடியாது சட்டம் இயற்ற முடியாது அப்படி செய்தால் குடும்ப அமைப்பு சிதைந்துவிடும் என்று சொல்லும் ஒரு சட்ட அமைப்பு சொல்லும் தண்டனை சரியான தீர்வுக்கு இந்த சமூகத்தை இட்டுச் செல்லுமா? ஒரு கொலை தண்டனை மூலம் எல்லாவற்றையும் மாற்றிவிடமுடியுமா?

மரணங்கள்/படுகொலைகள் 500+: அநேக மத்திய கிழக்கு தேசங்களில் அவர்களின் இயற்கை வளங்களை கையகப்படுத்தும் நோக்கில் உலகப் பேரரசுகள் இதுவரை ஈராக்கில், லிபியாவில், ஆப்கனில் என்னென்ன செய்தனவோ அதையே சில வருடங்களாய் சிரியாவிலும் செய்து வருகின்றனர். சமீபத்திய தாக்குதல்களில் 500க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், அதில் 150க்கும் அதிகமாக குழந்தைகள் பலியாகியிருக்கின்றன்ர். தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. எல்லோரும் சிரியாவுக்காய் பிரார்த்திக்கின்றோம், ஆனால் யாரிடம் என்று தெரியவில்லை. கனடா தேச தலைமை அமைச்சர் சிரிய அகதிகளை புன்னகையுடன் வரவேற்றதன் காணொளிகள் அதிகமாய் காணக்கிடைக்கின்றன. உலகத் தலைமை பீடங்கள் இந்த தாக்குதல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இந்திய ராணுவ சிப்பாய் ஒருவர் “என்ன அநியாம் நடக்கின்றது, ஏன் இப்படி அப்பாவி மக்களை கொல்கின்றார்கள்” என்று சொன்னார், பதிலாக உங்களுக்கு காஷ்மீர் தெரியுமா என்று அவரிடம் கேட்கவில்லை.

மரணம்/படுகொலை ?: ஜனவரி 17ஆம் தேதி ஆசிபா எனும் எட்டு வயது குழந்தை படுகொலை செய்யப்படுகின்றாள், அதற்கு முன்னான எட்டு நாட்கள் அக்குழந்தையை கோயிலுக்குள் வைத்து ஒரு கூட்டம் வண்புனர்வு செய்திருக்கின்றது. அதை பற்றி எந்த செய்தியும், எந்த ஒரு ஊடகமும் ஏப்ரல் வரை பெரிதாக பேசவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கைது செய்யக்கூடாது என்று அரசு அமைச்சர்கள் இருவர் போராட்டம் நடத்துகின்றனர். ஆசிபா பாலியல் படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து நாம் எல்லோரும் ஆத்திரப்படுகின்றோம். குற்றவாளிகளை கொலை செய்ய வேண்டும் என்று பேசுகின்றோம். இதே நேரத்தில் உத்திரபிரதேசத்தில் 17 வயது பெண் ஒருவரை பாலியல் வண்புணர்வு செய்த ஆட்சியில் இருக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினரை ஒரு வருடம் கழித்து கைது செய்திருக்கின்றார்கள். அந்த சிறுமியின் தந்தை மர்மமான முறையில் இரண்டு நாட்களுக்கு முன் மரணிக்கின்றார்.

   ங்கு பட்டியலிடப்படும் மரணங்கள் எதுவுமே புதிதல்ல, காலம் காலமாய் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்று. இடமும், மனிதர்களும் மட்டுமே மாறிக் கொண்டிருக்கின்றனர். மரணங்களை சுற்றி நடக்கும் நாடகங்களும், துக்க விசாரிப்புகளும், குற்றம் சுமத்தல்களும் கூட புதிதல்ல. மானுட வாழ்வின் அபத்தம் மனிதர்கள் மரணத்திடமிருந்து தப்பிக்கும் பொருட்டு தான் வாழ்வின் அனேக விடயங்களையும் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பிறந்த நொடி முதல் அல்லது கரு உருவான நொடி முதல் வாழ்க்கை என்பது உலகில் இருக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் மரணத்தை நோக்கிய பயணமாக மட்டுமே இருக்கின்றது. பிறப்பு என்பதே மரணத்தை நோக்கிய பயணம் எனும் போது ஏன் மரணத்தை கண்டு மனிதர்கள் இத்தனை கூச்சல் போட வேண்டும்? -காரணம் மனித மூளை பெருத்துவிட்டது. யார் வாழ் வேண்டும் யார் மரணிக்க வேண்டும் என்பதை மனித மூளை தீர்மானிக்க ஆரம்பித்து பல்லாயிரம் வருடங்கள் கடந்துவிட்டது. தன் பேராசைக்காய் உயிர்களை கொலை செய்ய துடிக்கும் அந்த மூளைக்கு எதிராக பேச வேண்டியிருப்பது மானிட இருப்பின் அவசியமானதாக இருக்கின்றது.

மதுவின் கொலை கண்டு அறச் சீற்றம் கொண்ட நம்மில் பெரும்பான்மையானவர்கள் மதுவுக்கு எதிராக நடந்த வன்முறையை வேறு வடிவத்தில், வெவ்வேறு கால சூழலில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் நடத்திக்கொண்டு தான் இருக்கின்றோம். மது மட்டும் சோறு இல்லாமல் மரணிக்கவில்லை, மனித சமூகம் பல்லாயிரம் மனிதர்களை தினம் தினம் பட்டினியால் கொலை செய்கின்றது. இந்த சமூக அமைப்பில் உயிருடன் இருக்கும் ஒவ்வொருவரும், நடக்கும் பட்டினி கொலைகளுக்கு காரணமானவர்களாய் இருக்கின்றோம். இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் நாம் மதுவை மறந்துவிட்டோம். நாம் பேச வேறு கொலை இருக்கின்றது. இங்கு நடக்கும் அனைத்து கொலைகளில் நமக்கும் சம பங்கு இருக்கின்றது எனும் உண்மையை நாம் பேசவும், உணரவும் மறுக்கின்றோம். நாம் நம்மை புனிதமானவர்கள் என்று நம்புகின்றோம், தவறுகளை யாரோ செய்கின்றார்கள் என்றே நம்புகின்றோம். ஆனால் இந்திய சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு கொலையின் குருதிக் கறையும் நம் அனைவரின் கைகளிலுமே படிந்திருக்கின்றது.

உணவு வேண்டி கையேந்தி நிற்கும் ஒருவரிடம் தான் நாம் நேர்மையை எதிர்பார்க்கின்றோம் அந்த நேர்மையின் அளவீட்டிலேயே நம் தர்ம அளவீட்டை முன்வைக்கின்றோம். முதலில் ஒருவர் உணவுக்காய் கையேந்துவது என்பதே மானிட சமூகத்தின் வளர்ச்சி எனும் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் வாழ அனைத்து உரிமைகளும் இருக்கின்றது. உழைப்பு, வெற்றி, வளர்ச்சி, செல்வம் எனும் போலி பெயர்களில் நம் சக உயிர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பறித்துவைத்துக் கொள்வது மானிடம் அல்ல. ஆனால் மதுவை இந்த பெயரில் ஒன்றை கொண்டு தான் கொலை செய்தோம், மொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து.

மது ஏன் திருட வேண்டும்? மதுவின் மலை நிலத்தை விட்டு அவரையும், அவர் சமூகத்தையும் துரத்தியது யார்? மேற்கு தொடர்ச்சி மலை காடுகளை ஏன் அழிக்கின்றார்கள்? இந்த கேள்விகள் எதற்கும் அதிகார மையங்கள் பதில் சொல்ல மாட்டார்கள். 2000ங்களுக்கு பின்னான மூன்றாம் உலக அரசுகள் மக்கள் நலன் எனும் கொள்கைகளை முற்றிலுமாய் மேற்கு நாடுகளிடம் அடகு வைத்துவிட்டதை அதன் பின்னனியில் நடக்கும் லாப வேட்டைகளை எந்த ஊடகங்களும் நம்மிடம் பேசாது.

இந்தியத் துணைக்கண்டத்தின் சமூக அமைப்பு ஒரு துளி அளவிலும் சமத்துவத்தையும், சமூக நீதியையும் சார்ந்ததாக இருக்கவில்லை. நம் சமூக மனம் அல்லது சமூக உளவியல் என்பதே ஏற்ற தாழ்வுகளை நம்பும், பின்பற்றும் ஒன்றாக தான் இருக்கின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தும் பாகுபாடுகளுடன் அமையப்பட்ட ஒரு சமூகத்தில் மனிதர்களுக்கான வாழும் உரிமையும், சனநாயகமும் எப்படி இருக்க முடியும். இன்னும் சாதிய சுவர்களும், மத வேற்றுமைகளும்/ஒவ்வாமைகளும், பால் அடக்குமுறைகளும் இருக்கும் ஒரு சமூகத்தை எப்படி சனநாயக சமூகம் என்று சொல்ல முடியும். மதுவுக்காகவும், ஆசிபாவுக்காகவும் ஆத்திரப்படும் நாம் தான் சாதியையும், மதத்தையும், குப்பையான இந்த கலாச்சாரத்தையும் தூக்கிபிடித்து பெருமை பேசுகின்றோம். மதுவுக்காகவும், ஆசிபாவுக்காகவும், சிரியாக்காகவும், மற்ற அனைவருக்காகவும் துயர் கொள்ளும் நாம் அனைவரும் முதலில் நம்மை நினைத்து தான் வெட்கம் கொள்ள வேண்டும். நம் சாதி பெருமைகளை பேசுவதற்காக, மத அடியாளங்களை தூக்கி சுமப்பதற்காக, பால் அடையாளங்களில் திமிர் கொள்வதற்காக.

பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட தொல்குடி, தலித் மக்களுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளில் ஒரு சதவிதம் கூட உண்மையாக பதிவு செய்யப்படாத, அதைப் பற்றிய உரையாடலை நிகழ்த்த விரும்பாத ஒரு சமூகத்தில் எந்த மானிட அறத்தை எதிர்பார்ப்பது? நிர்பயாவுக்கும், ஆசிபாவுக்கும் ஆத்திரப்படும் நாம் தான் நமக்கு தெரிந்த ஒரு பெண்னை வேசி என்று சொல்லியிருப்போம், ஒரு குழந்தையிடம் நீ பெண் அடக்கமாக இரு என்று சொல்லியிருப்போம், உன் கனவன் அடிக்கவே செய்வான் நீ பெண் அமைதியாக இரு, குடும்ப மானமே உன்னிடம் தான் இருக்கின்றது என்று சொல்லியிருப்போம், காதலித்த மகளை ஆணவக் கொலை செய்திருப்போம், அவள் தன் உடலைக் காண்பித்து வேலையில் உயர் பதவிக்கு சென்று விட்டாள் என்று சொல்லியிருப்போம், குண்டு என்கின்றோம், கருப்பு என்கிறோம். அடுத்தவரின் படுக்கை அறையினையும், கால் இடுக்குகளையும் எட்டிப் பார்க்க பேரார்வம் கொள்கின்றோம், உஸ்ஸு, ஒம்போது என்கின்றோம். பெண்கள் மீது அனைத்து வித வன்முறைகளையும் செய்யும் இந்த தேசம் தான், தேசியப்பெருமையினையும், கலாச்சார பெருமிதத்தையும் பெண்கள் உடல் மீதே திணித்து வைத்திருக்கின்றது. அதைச் சொல்லியே பெண்களுக்கு எதிராக வன்முறைகளையும் நிகழ்த்துகின்றது.

பாலியல் வன்முறைகள் அநேகமும் ஆண் எனும் அதிகாரத்தை நிரூபிக்கும் பொருட்டே நடந்தேறுகின்றன. ஆண்களின் பாலியல் வேட்கை என்பது இரண்டாம் பட்சமாகவே இருக்கின்றது. நான் ஆண் மற்ற பாலினங்களுக்கு எதிராக எதுவும் செய்ய உரிமை உள்ளவன் என்பதை ஒரு குழந்தை பிறந்த நாள் முதல் அதனிடம் சொல்லி வளர்க்க பழகியிருக்குக்கின்றது இந்த சமூக அமைப்பு. அதிகாரத்தை நிருபிக்கும் திமிர் ஆண்களின் பார்வை, உடல் மொழியில் ஆரம்பித்து அனைத்திலும் நிரம்பியிருக்கின்றது. ஆசிப்பாவுக்கு எதிரான வன்முறைக்கான காரணமாக குற்றவாளிகள் சொல்லியிருப்பது தங்கள் “இந்து வலிமையினை நிருபிக்க”. அநேக பாலியல் வன்முறைகளும் வலிமைகளை நிருபிக்கவே நடக்கின்றன. நம் அரசு அமைப்பு உடல், பாலியல் ரீதியான வன்முறைகளையே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று பேசுகின்றது. பொதுச் சமூகமோ பாதிக்கப்பட்டவர்களையே அநேக நேரம் குற்றவாளி ஆக்குகின்றது. ஒரு பெண் ஏன் இரவு பத்து மணிக்கு வெளியே செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்கின்றது அல்லது ஒரு பெண் ஏன் இப்படி ஆடை உடுத்த வேண்டும் என்று கேட்கின்றது.

பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறைக்கும் முழுத் தீர்வாக மரண தண்டனையினை முன்வைக்கின்றோம். ஒவ்வொரு மரண தண்டனை அறிவிப்பின் போதும் நீதி கிடைத்ததாக ஆனந்தம் கொள்கின்றோம். ஆனால் இந்த தேசம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் வண்புணர்வுகளும் ஒவ்வொரு நொடியும் நடக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை பெண்களுக்கும், மற்ற பாலினத்தவருக்கும், பால் புதுமையினருக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளுக்கான தகவல்கள் எங்கேயும் பதிவு செய்யப்படுவதில்லை. அப்படியான வன்முறைகளை செய்பவர்களில் பாதிபேர் இந்த சனநாயக அரசில் ஏதோ ஒரு இடத்தில் அங்கம் வகிப்பவர்களாகவே இருக்கின்றோம். இத்தனை மரண தண்டனைகளுக்கு பின்னும் ஏன் இந்த சமூகம் மாறவில்லை? காரணம் நாம் தீர்வுகளை சட்ட புத்தகங்களில் தேடுகின்றோம். ஆனால் ஒரு சமூகமே மிகவும் பிற்போக்காய், ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் போது சட்ட காகிதங்கள் எப்படி முழுமையான தீர்வு தரும்? மேலும் நம் சட்டமுறைகளும், தண்டனை முறைகளும் குற்றவாளிகளை திருத்துவதற்கான முறைகளாக இல்லாமல் மேலும் தீவிர குற்றவாளிகள் ஆக்குவதற்கான இடமாகவே இருக்கின்றது. இப்படி இருக்க சமூகத்தில் கொலை தண்டனை என்ன மாற்றங்களை கொடுக்கும்? நாம் அடிக்கடி ஒப்புமைபடுத்தி பேசும் இசுலாமிய நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு நடப்பதற்கு சமமாக நடக்கின்றன. ஆனால் கொலை தண்டனையே இல்லாத ஸ்வீடன் போன்ற மேற்கு நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கிழக்கை காட்டிலும் குறைவாக நடக்கின்றன. காரணம் இரண்டாம் உலகப் போருக்கு பின்னான மேற்கு உலகம் தன் விக்டோரிய விழுமியங்களை தூக்கி எறிந்துவிட்டு புதிய சமூகத்துக்கான முயற்சியில் இருக்கின்றனர். ஆனால் நாம் இன்னும் விக்டோரிய விழுமியங்களை நம் கலாச்சார பின்புலத்துடன் இணைத்து பழமையிலேயே இருக்கின்றோம். அதை கலாச்சார பெருமை என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கின்றோம்.

நிர்பயாவுக்கும், ஆசிபாவுக்கும் ஆத்திரப்படும் நம்மில் எத்தனை பேர் இந்திய ராணுவம் செய்யும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பேச முன்வருவோம்? கஷ்மிரில், தண்டகாரண்யத்தில், மணிப்பூரில் இந்திய ராணுவம் இன்றுவரை செய்யும் பாலியல் வன்முறைகளை நாம் பேசுவோமா?

நம்மில் எத்தனை பேர் நம் நண்பர்களுடன், பெற்றோர்களுடன், பிள்ளைகளுடன் உடல் பற்றி பேசியிருக்கின்றோம்? நம்மில் எந்த கல்வி முறை பாலியல் கல்வியைப் பற்றி பேசுகின்றது. நம்மில் எந்த அமைப்பு உடலை புனிதப் படுத்தாமல் வெறும் உடலாக மட்டும் பார்க்கின்றது? நம்மில் எத்தனை பேர் தொடுதல் (good touch, bad touch) குறித்து குழந்தைகளுடன் பேசியிருக்கின்றோம்? செக்ஸ் எனும் வார்த்தையே நமக்கு தீமையானது, உச்சரிக்க கூடாதது அல்லது குழந்தைபேறுக்கு மட்டுமேமானது.

ஊடகங்கள் மட்டுமே நிரம்பிய இன்றைய உலகில், ஊடகங்களே நமக்கான செய்திகளை உருவாக்கி தருகின்றன. நாம் எதை பற்றி பேச வேண்டும், யாரை பற்றி பேச வேண்டும் என்று அனைத்தையும் தீர்மானிக்கின்றன. மோடி நாகனானதும், காஷ்மீரிகள் தீவிரவாதிகள் ஆனதிலும் அதிக பங்கு ஊடங்களையே சேரும். அதனாலே அவர்கள் ஸ்ரீதேவியின் மரணத்தை பேசிய அளவு மற்ற எந்த மரணத்தையும் பேசவில்லை. ஊடகங்களுக்கு வேலை மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்ப்பதல்ல, செய்திகளை சமைத்து மக்களை உண்மையின் எதிர் திசையில் திருப்பிவிடுவது. அப்படி தான் நம் சமூகத்தின் அநேக ஊடகங்களும் செயல்படுகின்றன, அதைக் கொண்டே சமூகத்தின் கூட்டு மனசாட்சி கட்டமைக்கப்படுகின்றது. அதனாலே நாம் ஸ்ரீதேவியின் மரணத்தை பேசிய அளவு, அதே கால கட்டத்தில் நடக்கும் வேறு கொலைகளை பற்றி பேசவில்லை.

இந்த சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு வன்முறைக்கு பின்னும் சாதி ஊறிப்போன இந்த சமூக அமைப்பும் ஆணாதிக்கம் மிக்க குடும்ப அமைப்புமே காரணமாக இருக்கின்றது. நாம் இந்த இரண்டு அமைப்புகளையும் உடைப்பதற்கான வேலைகளை செய்யாமல் அல்லது உரையாடாமல் அல்லது சக மனிதர்களை மனிதர்களாய் பார்க்காமல், ஒரு உடலை கொண்டாடவும் ஒரு உடலை தீட்டு என்று ஒதுக்கவும் செய்வோம் என்றால் நாளை இந்த சாதிய, ஆணாதிக்க சமூகம் அனைவர் மீதும் வன்முறையை செலுத்தி கொல்லும். நீங்களும் நானும் செத்து போவோம்.

Comments

Popular posts from this blog

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள்: வெறுப்பை ஜனநாயகப்படுத்தும் அழகியல்!

0. பெருந்தொற்று குறித்த செய்தி என்னை வந்து சேர்ந்த போது, நான் எனது சீனப் பயணத்திற்கு தீவிரமாக தயாராகி கொண்டிருந்தேன். ஒரு வேளை பெருந்தொற்று என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால், நான் இந்த பிரதியை பெய்ஜிங்கிலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அது பெருந்தொற்றாக உருவாகியிருக்கவில்லை. மாறாக, சில நூறு மனிதர்களை நிமோனியா போன்ற விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் அறியாத கிருமியாக, தொலைதூர செய்தியாக இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று நான் வாழ்ந்த நகரத்தை வந்தடைய மூன்று மாதங்களானது. உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தொற்றுநோயாக அறிவித்த அந்த இரவில் நண்பர் ஒருவர் பின்வரும் வாட்சப் செய்தியை அனுப்பியிருந்தார்: “நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. பிரிந்து கிடக்கும் மனித இனம், ‘மனிதர்’ எனும் ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றினையும் அற்புதமான சூழலை கண்களுக்கு புலப்படாத சிறிய கிருமி உருவாக்கி இருக்கின்றது” 1. மார்ச் 2019க்கு பிறகு மனித இருப்பு அதிக சிக்கலானதாகவும், இதுவரை இல்லாத அளவில் மெய்நிகரானதாகவும் மாறியது. கோவிட் -19 பற்றிய செய்திகள் இணையம் மற்றும் தொலைக்காட்சி திரைகளை நிரப்பின. போ...

In the most health-obsessed society ever, all is not well*: On Trauma

1 Philosopher Byung-Chul Han's essay Neuronal Power begins with the following lines: " Every age has its signature afflictions. Thus, a bacterial age existed; at the latest, it ended with the discovery of antibiotics. Despite widespread fear of an influenza epidemic, we are not living in a viral age. Thanks to immunological technology, we have already left it behind. From a pathological standpoint, the incipient twenty-first century is determined neither by bacteria nor by viruses, but by neurons ". Modern integrative body mind science defies Byung-Chul Han’s statement, that it is reductive to define human suffering solely in terms of ailments. However, we are living in an era, where production relations dictate nearly everything about human existence, in this specific context Byung-Chul Han’s statement—that the majority of human society is afflicted by mental or neuronal issues—serves as a foundational lens to understand contemporary humans and their struggles. In today’...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...